நாடாளுமன்றத் தேர்தல் முறைமையில் வருகின்றது மாற்றம்!

நாடாளுமன்றத் தேர்தல் முறைமையை மாற்றியமைப்பதற்கான அரசமைப்புத் திருத்தத்தை மேற்கொள்வதற்கான விசேட அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அரசின் சார்பில் நீதி மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாஸ ராஜபக்ஷவால் அதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

உத்தேச அரசமைப்பு திருத்தத்தின்படி, 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 160 பேர் தொகுதி அளவில் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். எஞ்சிய 65 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய அல்லது மாகாண மட்டத்தில் விகிதாசார அடிப்படையில் தெரிவு செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, அரசமைப்பு திருத்தத்தை மேற்கொள்வதற்கு அரசு எதிர்பார்த்துள்ள நிலையில், அமைச்சரவையின் அனுமதியை வழங்குமாறு நீதி அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

தற்போதைய அரசமைப்பின்படி, 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 196 பேர் விகிதாசார அடிப்படையில் மாவட்ட மட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். எஞ்சியுள்ள 29 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சிகள் பெற்ற வாக்குகளின் வீதத்துக்கு ஏற்ப அந்தந்த கட்சிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.