“தந்தையின் சிதைந்த உடலை சேகரிக்க முதன்முறையாக தமிழகம் வந்தேன்..” – பிரியங்கா காந்தி உருக்கம்

32 ஆண்டுகளுக்கு முன்பாக தனது தந்தை ராஜீவ் காந்தியின் சிதறிய உடலை எடுத்துச் செல்ல தமிழகம் வந்ததாக பிரியங்கா காந்தி உருக்கமாக பேசினார்.

கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, திமுக மகளிரணி சார்பில், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற மகளிர் உரிமை மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, சுப்ரியா சுலே, காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆனி ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பேசுகையில், “32 ஆண்டுகளுக்கு முன்பாக தனது தந்தை ராஜீவ் காந்தியின் சிதறிய உடலை எடுத்துச் செல்ல தமிழகம் வந்ததாக உருக்கமாக கூறிய பிரியங்கா காந்தி, நீங்கள் தான் என் தாய், சகோதரி என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

தனது தந்தையின் படுகொலையின் போது தமிழ்நாட்டு பெண்கள் சிந்திய கண்ணீரின் மூலம் அவர்களுடன் தனக்கு மிகப்பெரிய பந்தம் ஏற்பட்டதாகவும் பிரியங்கா காந்தி உணர்வுப்பூர்வமாக குறிப்பிட்டார்.

தந்தை பெரியார் எழுதிய பெண் ஏன் அடிமையானாள் புத்தகத்தை குறிப்பிட்டு பேசிய பிரியங்கா, நூறாண்டுகளுக்கு முன்பு பெண் ஏன் அடிமையானாள் என்று கேள்வி எழுப்பியவர் பெரியார் என்றும், சமூக மாற்றத்துக்கான புரட்சி தமிழ்நாட்டில் தான் உருவாகியது என்றும் பிரியங்கா காந்தி பெருமிதம் தெரிவித்தார்.

மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் பிரியங்கா காந்தி வலியுறுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.