மனைவியைப் படுகொலைசெய்துவிட்டு தப்பியோடிய கணவன் மடக்கிப் பிடிப்பு! – யாழில் பொலிஸ் புலனாய்வாளர்கள் அதிரடி.

யாழ்ப்பாணம் – நாவற்குழிப் பகுதியில் மனைவியைக் கொலை செய்து விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட கணவன் பொலிஸ் புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணம் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கமைய இந்தக் கைது நடவடிக்கை அதிரடியாக முன்னெடுக்கப்பட்டது.

நாவற்குழி, ஐயனார் கோயிலடியில் வசிக்கும் அஜந்தன் யமுனா என்கின்ற 23 வயதான இரண்டு பிள்ளைகளின் தாய் கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார்.

இந்நிலையில் வீட்டில் கணவனைக் காணாத நிலையில் பொலிஸாரின் சந்தேகம் வலுத்தது.

குடும்பத் தகராறில் கணவரால் அந்தப் பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனக் கருதிய பொலிஸார் கணவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அண்மையில் ஓட்டோவில் சந்தேகநபர் தப்பிக்க முற்பட்ட வேளையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபரை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்ட நிலையில். “நான் மனைவியைத் தாக்கினேன். மனைவி உயிரிழந்தமை எனக்குத் தெரியாது”- என்று சந்தேகநபர் தெரிவித்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காகச் சாவகச்சேரிப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.