யாழில் ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவேந்தல் நிகழ்வு!

யாழ்ப்பாணத்தில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 23ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ். ஊடக அமையத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. (விரிவான செய்தி 3ஆம் பக்கத்தில்)

யாழ். ஊடக அமையத்தின் தலைவர் கு.செல்வக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பொதுச்சுடரை ஊடக அமையத்தின் செயலாளர் சி.நிதர்ஷன் ஏற்றிவைக்க, நிமலராஜனின் உருவப் படத்துக்கு மலர்மாலையை ஊடகவியலாளர் ம.நியூட்டன் அணிவித்தார்.

அதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர்.

போர்ச் சூழலில் யாழ்ப்பாணத்தில் இருந்து துணிவாக ஊடகப் பணியாற்றியவர் மயில்வாகனம் நிமலராஜன். பி.பி.சியின் தமிழ் மற்றும் சிங்கள சேவை, வீரகேசரி, ராவய போன்ற ஊடகங்களில் பணியாற்றி இருந்தார்.

இந்நிலையில், கடந்த 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி யாழ். மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளை அவரது வீட்டு வளவினுள் புகுந்த ஆயுததாரிகள், வீட்டின் யன்னல் ஊடாக அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். அதன்போது அவர் எழுதிக்கொண்டு இருந்த கட்டுரைத் தாள் மீது சரிந்தே சாவடைந்தார்.

கொலையாளிகள் நிமலராஜனைப் படுகொலை செய்த பின்னர், வீட்டின் மீது கைக்குண்டு தாக்குதலையும் மேற்கொண்டனர். அதன்போது வீட்டில் இருந்த நிமலராஜனின் தந்தை சங்கரப்பிள்ளை மயில்வாகனம், தாய் லில்லி மயில்வாகனம் மற்றும் மருமகன் ஜெகதாஸ் பிரசன்னா ஆகியோர் படுகாயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.