‘ஹாமூன்’ புயல் வங்கதேசம் அருகே கரையை கடந்தது!

மத்தியமேற்கு வங்கக்கடல் உருவான தீவிர புயலான‘ஹாமூன்’ புயலாக வலுவிழந்து புதன்கிழமை(அக்.25) வங்கதேசம் அருகே கரையை கடந்தது. அடுத்த ஆறு மணி நேரத்தில் வடகிழக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் திங்கள்கிழமை காலை உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் திங்கள்கிழமை மாலை ‘ஹாமூன்’ புயலாக வலுப்பெற்றது. இது செவ்வாய்க்கிழமை காலை தீவிர புயலாக வடமேற்குவங்கக்கடல்பகுதிகளில் நிலவியது. இது மேலும் வலுப்பெற்று வடமேற்கு மற்றும் அதனையொட்டிய வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மிக தீவிர புயலாக நிலவியது. இந்த புயல் தற்போது மணிக்கு 23 கி.மீ. வேகத்தில் நகா்ந்து வருகிறது. இது மேலும் வடகிழக்கு திசையில் நகா்ந்து புயலாக வலுவிழந்து வங்கதேசத்தின் கெபுபரா மற்றும் சிட்டகாங் இடையே புதன்கிழமை(அக்.25) மாலை கடக்கக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்தது.

இந்த நிலையில், வங்கதேசத்தின் கெபுபரா மற்றும் சிட்டகாங் இடையே 40 கி.மீ. தொலைவில் 5.30 மணி நேரமாக மையம் கொண்டிருந்த ‘ஹமூன்’ புயல் வங்கதேசம் அருகே கரையைக் கடக்கும் செயல்முறையைத் தொடங்கியுள்ளது மற்றும் அடுத்த ஆறு மணி நேரத்தில் வடகிழக்கு திசையில் நகர்ந்து அடுத்த ஆறு மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அடுத்த ஆறு மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவிழக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் மணிக்கு 100 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும். புதன்கிழமை மாலை வரை கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், மிசோரமில் தனிமைப்படுத்தப்பட்ட கனமழையுடன் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வியாழக்கிழமை மிசோரம் மற்றும் திரிபுராவில் பல இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் கிழக்கு அருணாச்சல பிரதேசத்தின் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
வங்கக் கடலில் உருவாகும் ‘ஹாமூன்’ புயல் குறித்து மீனவர்களுக்கு எச்சரிக்கை செய்வதற்காக ராமேசுவரத்தில் உள்ள பாம்பன் துறைமுகத்தில் செவ்வாய்கிழமை2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

இந்த தீவிர புயலுக்கு ஈரான் ‘ஹாமூன்’ என பெயரிட்டுள்ளது. ‘ஹமூன்’ என்பது பாரசீக வார்த்தையாகும், இது உள்நாட்டு பாலைவன ஏரிகள் அல்லது சதுப்பு நிலங்களைக் குறிக்கிறது. ஹெல்மண்ட் படுகையையொட்டிய பகுதிகளில் இயற்கையான பருவகால நீர்த்தேக்கங்களாக அவை உருவாகின்றன.

Leave A Reply

Your email address will not be published.