நவம்பர் 13 இல் ‘பட்ஜட்’ சமர்ப்பிப்பு! — டிசம்பர் 13 இல் வாக்கெடுப்பு.

2024ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் (ஒதுக்கீட்டுச் சட்டமூலம்) எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்கு நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு கூடிய போதே இது தொடர்பில் இணக்கம் காணப்பட்டது என்றும் அவர் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எதிர்வரும் நவம்பர் 13 ஆம் திகதி திங்கட்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால், 2024 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை இரண்டாம் மதிப்பீடு எனப்படும் ‘வரவு – செலவுத் திட்ட உரை’ நாடாளுமன்றத்துக்கு முன்வைக்கப்படவுள்ளது.

அதன்பின்னர், நவம்பர் 14 முதல் 21 வரை ஞாயிறு தினங்கள் தவிர்ந்து 7 நாட்கள் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (வரவு – செலவுத் திட்ட) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.

அத்துடன், வரவு – செலவுத்திட்ட இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பி.ப. 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

அதையடுத்து, குழுநிலை விவாதம் நவம்பர் 22 ஆம் திகதி புதன்கிழமை முதல் டிசம்பர் 13 ஆம் திகதி புதன்கிழமை வரை ஞாயிறு தினங்கள் தவிர்ந்து 19 நாட்கள் இடம்பெறவுள்ளது.

அதற்கமைய, 2024 நியதியாண்டுக்கான வரவு – செலவுத்திட்ட மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 13 ஆம் திகதி புதன்கிழமை பி.ப. 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

வரவு – செலவுத்திட்ட விவாதத்தின் போது ஒவ்வொரு நாளும் மு.ப. 9.30 மணி முதல் பி.ப. 6.00 மணி வரை விவாதம் இடம்பெறவுள்ளதுடன், வாக்கெடுப்பு இடம்பெறும் நாட்கள் தவிர்ந்த ஏனைய நாட்களில் பி.ப. 6.00 மணி முதல் பி.ப. 6.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதம் இடம்பெறும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.