கைதான இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்வு!

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்கள் 4 படகுகளுடன் நேற்று (06) கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் இராமேஸ்வரம் மற்றும் கோட்டைபட்டினம் பகுதிகளில் இருந்து நேற்றுக் காலை புறப்பட்ட படகுகளே நேற்று மாலை இலங்கையின் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் கடற்பரப்புகளுக்குள் எல்லை தாண்டி உட்புகுந்து மீன்பிடியில் ஈடுபட்ட வேளை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் கடற்பரப்பில் ஒரு படகுடன் கைது செய்யப்பட்ட 8 தமிழக மீனவர்களும் மன்னார் கடற்படை முகாமுக்குக் கொண்டு வரப்பட்டு மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் கடற்பரப்பில் மூன்று படகுகளுடன் கைதான 14 மீனவர்களும் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ள நிலையில், இன்று மாவட்ட நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.