யாழ்ப்பாணத்தில் பாடசாலைக்கு அருகில் போதை வியாபாரம் செய்த அறுவர் கைது – வாங்கிய மாணவர்களும் மாட்டினர்.

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை, அவர்களிடம் போதைப்பொருளைக் கொள்வனவு செய்த 15 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களைப் பொலிஸார் கடுமையாக எச்சரித்ததுடன் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வையும் வழங்கி பெற்றோர்களிடம் கையளித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யாழ். புறநகர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக்கு அருகில், மாணவர்களுக்குப் போதை மாத்திரைகள், போதை கலந்த பாக்குகள், மாவா பாக்கு உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்த குற்றச்சாட்டில் 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், அவர்களிடம் அவற்றை வாங்கி வந்த மாணவர்களைப் பொலிஸார் அடையாளம் கண்டு கொண்டனர்.

அவ்வாறு அடையாளம் காணப்பட்ட 15 மாணவர்களையும் பொலிஸார் கடுமையாக எச்சரிக்கை செய்துடன் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வையும் அவர்களுக்கு ஊட்டி பெற்றோர்களிடம் கையளித்தனர்.

கைது செய்யப்பட்ட 6 இளைஞர்களையும் யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.