நெல்லியடியில் பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம், நெல்லியடிப் பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தி, இரண்டு நாள்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றத்தில் அனுமதி பெற்ற நெல்லியடிப் பொலிஸார், அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-

பாடசாலைக்கு அருகில் உள்ள கடை ஒன்றில் ஹட்டன் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வேலை செய்து வந்தார். அந்த இளைஞர் கடையில் போதைப்பொருள் வியாபாரத்திலும் ஈடுபட்டு வருகின்றார் என்று நெல்லியடிப் பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைக்கப் பெற்றது.

அதன் அடிப்படையில் நேற்று அந்த இளைஞரைக் கைது செய்த பொலிஸார், அவரது உடைமையில் இருந்து 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.

விசாரணைகளின் பின்னர், பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் இளைஞரை முற்படுத்திய பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால், சந்தேகநபரை இரண்டு நாள் பொலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி வேண்டி மன்றில் பொலிஸார் விண்ணப்பம் செய்தனர்.

அதை ஏற்றுக்கொண்ட மன்று, சந்தேகநபரை பொலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதித்தது.

பொலிஸ் காவலில் சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், சந்தேகநபருடன் போதைப்பொருள் விற்பனை வலையமைப்பைச் சேர்ந்தவர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், சந்தேகநபரிடம் போதைப்பொருளை வாங்கி வந்தவர்களையும் அடையாளம் கண்டுகொண்டுள்ளதாகவும் , அவர்களையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.