மன்னார் மாவட்ட அரச அதிபராக சனியன்று பதவியேற்கின்றார் கனகேஸ்வரன்!

வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் க.கனகேஸ்வரன் மன்னார் மாவட்டத்தின் புதிய அரச அதிபராக எதிர்வரும் சனிக்கிழமை காலையில் பதிவியேற்கின்றார்.

1998 முதல் 2003 செப்டெம்பர் வரை கொடிகாமம் போகட்டி அ.த.க. பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றிய அவர், 2003 முதல் 2004 ஓகஸ்ட் வரை நிர்வாக சேவைக்கான பயிற்சியில் ஈடுபட்டார்.

அதன்பின்னர் அவர் 2004 ஓக்டோபர் முதல் 2015 ஆண்டு மே மாதம் வரையில் தொழில் திணைக்களத்தின் பிரதித் தொழில் ஆணையாளராகப் பணியாற்றினார்.

2015 ஜூன் முதல் 2019 செப்டெம்பர் வரையில் மருதங்கேணிப் பிரதேச செயலாளராகவும், 2019 ஒக்டோபர் முதல் 2019 டிசம்பர் வரையில் யாழ்ப்பாணம் மாவட்ட மேலதிக அரச அதிபராகவும் அவர் பணியாற்றினார்.

2019 டிசம்பர் 16 முதல் 2023 நவம்பர் 21 வரையில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரச அதிபராகப் பணியாற்றிய வேளை நிர்வாக சேவை விசேட தரத்துக்குத் தேர்வாகிய அவர், 2023 நவம்பர் 22 முதல் தற்போது வரையில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராகப் பணியாற்றுகின்றார்.

இந்தநிலையில் நாளைமறுதினம் (23) சனிக்கிழமை முதல் மன்னார் மாவட்ட அரச அதிபராகப் பதவியேற்கும் வகையில் இன்று வியாழக்கிழமை அவருக்கு நியமனக் கடிதம் வழங்கப்படவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.