மீண்டும் வரலாறு காணாத உச்சத்தை தொட்டது முட்டை விலை!

நாமக்கல் மாவட்டத்தில் முட்டை கொள்முதல் விலை வரலாறு காணாத விலை உயர்வை எட்டி, 5 ரூபாய் 80 காசுகளானது.

தமிழ்நாட்டின் நாமக்கல் மண்டலத்தில் சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு தினமும் சுமார் 5 கோடியே 50 லட்சம் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்த முட்டைகள், தமிழகம், கேரளா மற்றும் வடமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்துக்கு வாரந்தோறும் முட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த நிலையில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனை முட்டை விலையை அறிவித்து வருகிறது. இதை அனைத்து பண்ணையாளர்களும் கடைப்பிடித்து வருகின்றனர்.

அந்த வகையில் ஞாயிறன்று புதிய உச்சமாக முட்டை கொள்முதல் விலை தற்போது 5 ரூபாய் 75 காசுகளாக இருந்தது. இது நேற்று 5 ரூபாய் 80 காசுகளாக உயர்ந்து வரலாற்று உச்சத்தை அடைந்தது. கடந்த 2 நாட்களில் மட்டும் 15 காசுகள் உயர்ந்துள்ளன.

சென்னையில் சில்லறையில் ஒரு முட்டையின் விற்பனை விலை 6 ரூபாய் 50 காசுகளாக உள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காரணமாக முட்டை நுகர்வு அதிகரிப்பு, வட மாநிலங்களில் முட்டை நுகர்வு உயர்வு போன்ற காரணங்களால் முட்டை விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.