மணிப்பூர் முதல் மும்பை வரை.. ராகுலின் அடுத்த பயணம் அறிவிப்பு

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் இரண்டாம் கட்டப் பயணம் ஜனவரி 14-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

கடந்த 2022 செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கி கேரளம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தில்லி, ஹரியாணா, ஹிமாச்சல், தில்லி வழியாக ஜம்மு-காஷ்மீர் வரை ராகுல் காந்தி ஒற்றுமைக்கான நடைப்பயணம்(பாரத் ஜோடோ யாத்ரா) மேற்கொண்டார்.

நாடு முழுவதும் ராகுல் காந்தியின் நடைப்பயணத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில், இந்தியாவின் கிழக்கில் இருந்து மேற்கு வரை இரண்டாம் கட்ட நடைப்பயணம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஜனவரி 14-ஆம் தேதி மணிப்பூரில் ராகுல் காந்தியின் இரண்டாம் கட்டப் பயணம் தொடங்கி மும்பையில் மார்ச் 20-ஆம் தேதி முடிவடையும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் பேசியது:

“ஜனவரி 14-ஆம் தேதி இம்பாலில் தொடங்கி மார்ச் 20-ஆம் தேதி மும்பையில் ராகுல் காந்தியின் இரண்டாம் கட்ட பயணம் நிறைவடைகிறது. மணிப்பூர், நாகலாந்து, அசாம், மேகாலயா, மேற்கு வங்கம், பிகார், ஜார்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரம் ஆகிய 14 மாநிலங்களில் உள்ள 85 மாவட்டங்கள் வழியாக இந்த பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது.

பேருந்து மூலம் பயணம் மேற்கொண்டாலும், குறிப்பிட்ட இடங்களில் நடந்து சென்று மக்களை ராகுல் காந்தி சந்திப்பார். அனைவருக்கும் நீதி வேண்டும் என்ற குறிக்கோளை பிரதிபலிக்கும் நோக்கில் ‘பாரத் நியாய யாத்ரா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.” என்றார்.

ராகுல் காந்தியின் இந்தப் பயணமானது வரும் மக்களவைத் தேர்தலை கணக்கில் கொண்டு காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.