பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி; மேலும் ஒருவர் காயம் – தேடுதல் நடத்தச் சென்ற வேளை மாத்தறையில் பயங்கரம்.

மாத்தறை, வெலிகம – பெலன பகுதியில் இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு – தேடுதல் நடவடிக்கையில்போது பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள துப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.

விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட்டே உயிரிழந்துள்ளார். உப பொலிஸ் பரிசோதகர் காயம் அடைந்துள்ளார். இவர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய பொலிஸ் குழுவொன்று இன்று அதிகாலை 2 மணியளவில் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளது,

இதன்போது குழுவொன்று துப்பாக்கிப் பிரயோகமொன்றை மேற்கொண்டு வானொன்றில் தப்பிக்க முயற்சித்த தருணத்தில் பொலிஸார் பதில் துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்தியுள்ளனர்.

இதன்போது பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்ட நிலையிலேயே, பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தென் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் பணிப்புரையின் பிரகாரம் விசேட பொலிஸ் அதிகாரிகள் குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.