செவ்வாயன்று கூடுகின்றது நாடாளுமன்றம்! – முக்கிய சட்டமூலங்கள் மீது விவாதம்.

நாடாளுமன்றம் எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை கூடவிருப்பதாக நாடாளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை மு.ப. 9.30 முதல் மு.ப. 10.30 வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 5.00 மணிவரை தேசிய ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்துக்குமான அலுவலகம் சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு), தேசிய நீரளவை சட்டமூலம் (இரண்டாவது மதிப்பீடு), கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டமூலத்தின் கீழ் 2355/30ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்கு விதி, இலங்கை முதலீட்டுச் சபைச் சட்டத்தின் கீழ் 2334/55ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்கு விதி என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

அதன் பின்னர், இலங்கை பட்டய கப்பல் தரகர்கள் நிறுவகம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம், இலங்கை சித்த உளவியல்சார் உயர் கற்கைநெறிகள் திறந்த நிறுவனம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் என்பன இரண்டாவது மதிப்பீட்டுக்காகச் சமர்ப்பிக்கப் படவுள்ளன.

இதனைத் தொடர்ந்து பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை (ஆளும் கட்சி) மீதான விவாதம் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 10ஆம் திகதி புதன்கிழமை, மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரை பிரதமரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்காக (4 கேள்விகள்) நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மு.ப. 10.00 மணி முதல் 10.30 மணி வரையான நேரம் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக (5 கேள்விகள்) ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன்பின்னர் மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை நீதிமன்றம், நியாய சபை அல்லது நிறுவனமொன்றை அவமதித்தல் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு தொடர்பில் கடந்த நவம்பர் 8 ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்ட விவாதத்தின் இரண்டாவது நாள் விவாதம் நடத்தப்படவுள்ளது. அன்றையதினம், மத்தியஸ்திலிருந்து விளைகின்ற சர்வதேச தீர்த்துவைத்தல் உடன்படிக்கைகளை அங்கீகரித்தலும் மற்றும் வலுவுறுத்தலும் சட்டமூலம், அற்றோனித் தத்துவம் (திருத்தச்) சட்டமூலம், மத்தியஸ்த சபை (திருத்த) சட்டமூலம், மோசடிகளைத் தடுத்தல் (திருத்த) சட்டமூலம், நொத்தாரிசு (திருத்த) சட்டமூலம் ஆகியவை தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் நடைபெறவுள்ளது.

இதனைத் தொடர்ந்து அன்றைய தினம் பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான இரண்டு கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 11ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை எதிர்க்கட்சியால் முன்வைக்கப்படும் சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் நடத்தப்படவுள்ளது.

எதிர்வரும் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப. 9.30 மணி முதல் மு.ப 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை தனியார் உறுப்பினர் பிரேரணைகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.