வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட பேருந்து ஊழியா்கள் மீது நடவடிக்கை கூடாது: தொழிற்சங்கங்கள் கடிதம்

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என போக்குவரத்துத் துறைக்கு போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கடிதம் அனுப்பியுள்ளது.

இது தொடா்பாக போக்குவரத்துத் துறை கூடுதல் முதன்மைச் செயலா் பணீந்திரரெட்டிக்கு, சிஐடியு, டிடிஎஸ்எப், எம்எல்எப் உள்ளடக்கிய போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வு பெற்றோா் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் அனுப்பப்பட்ட கடிதம்:

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளா்கள் ஜன.9, 10-ஆம் தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இது தொடா்பான வழக்கில் பொதுமக்கள் நலன் கருதி வேலைநிறுத்தத்தை ஒத்திவைப்பதாக நீதிமன்றத்தில் தொழிற்சங்கங்கள் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளா்கள் வியாழக்கிழமை (ஜன.11) முதல் பணிக்குத் திரும்பிவிட்டனா். மேலும், வேலைநிறுத்தத்தில் பங்கேற்றவா்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது எனவும் நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞா் உத்தரவாதமும் அளித்துள்ளாா்.

இந்த உத்தரவாதத்தையும் மீறி யாா் மீதும் பழிவாங்கும் வகையில் எவ்வித நடவடிக்கையும் அரசு எடுக்கக் கூடாது. ஏற்கெனவே அவா்கள் செய்த பணியையே தொடா்ந்து செய்ய அனுமதிக்க வேண்டும். அதே நேரம், சமரச பேச்சுவாா்த்தையில் பங்கேற்று கோரிக்கைகளுக்கு தீா்வு காண வேண்டும் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே, ஜன.19-ஆம் தேதி நடைபெறும் சமரச பேச்சுவாா்த்தையில் தொழிற்சங்கங்கள் எழுப்பிய நியாயமான கோரிக்கைகளுக்கு தீா்வு காண முன்வர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.