வவுனியா வைத்தியசாலையில் சிறை அதிகாரிகளின் காவலில் சிகிச்சை பெற்ற சந்தேகநபர் தப்பியோட்டம்! – பொலிஸார் தீவிர தேடுதல்.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் தப்பியோடியுள்ள நிலையில் குறித்த கைதியைக் கைது செய்யும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக வவுனியா பாெலிஸார் இன்று தெரிவித்தனர்.

கஞ்சா விற்பனை மற்றும் வைத்திருந்தமை தாெடர்பில் கடந்த 26 ஆம் திகதி நெளுக்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 28 வயதுடைய இளைஞர் வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் வவுனியா சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

29 ஆம் திகதியன்று சிறைச்சாலையில் சந்தேகநபரான 28 வயதுடைய இளைஞருக்கு ஏற்பட்ட சுகயீனம் காரணமாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.

இந்நிலையிலேயே 31 ஆம் திகதி காலை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிலிருந்து அவர் தப்பியோடியுள்ளார்.

தப்பியோடிய குறித்த சந்தேகநபரைக் கைது செய்வதற்குரிய நடவடிக்கையை வவுனியா பொலிஸார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.