சாந்தனின் புகழுடல் இன்று தமிழ் மக்களின் அஞ்சலிக்கு : நாளை எள்ளங்குளம் மயானத்தில் அடக்கம்

சாந்தனின் புகழுடல் இன்று
தமிழ் மக்களின் அஞ்சலிக்கு

* தேசிய துக்கதினமாக அனுஷ்டிக்க பொது அமைப்புக்கள் கோரிக்கை
* நாளை எள்ளங்குளம் மயானத்தில் அடக்கம்

சாந்தன் என்று அழைக்கப்படும் தில்லையம்பலம் சுதேந்திரராஜாவின் புகழுடல் வடக்கில் இன்று மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ள நிலையில் இன்றைய தினத்தை தமிழ்த் தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்குமாறு பொது அமைப்புக்கள் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளன.

இன்றைய தினத்தைத் தமிழ்த் தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்கப் பொது அமைப்புக்கள் நேற்று ஒன்று கூடி தீர்மானித்துள்ளன என்று அறிவித்துள்ள குரலற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் முருகையா கோமகன், இன்று தேவையற்ற களியாட்ட நிகழ்வுக்களைத் தவிர்த்து அமரர் சாந்தனுக்கு அனைவரும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்த அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழகத்தில் உயிர் துறந்த தில்லையம்பலம் சுதேந்திரராஜாவின் (சாந்தன்) புகழுடல் இன்று ஞாயிற்றுக்கிழமை மக்கள் அஞ்சலி செலுத்த ஏதுவாக அவரது தாய் மண்ணுக்கு எடுத்துவரப்படவுள்ளது.

இன்று காலை 8 மணிக்கு வவுனியாவில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படும் சாந்தனின் புகழுடல் தொடர்ந்து மாங்குளம் பகுதிக்கு 9 மணிக்கு எடுத்துவரப்படவுள்ளது.

தொடர்ந்து காலை 10.30 மணிக்குக் கிளிநொச்சியில் மக்கள் அஞ்சலியின் பின்னராக யாழ்ப்பாணத்துக்குப் புகழுடல் எடுத்துவரப்படவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் கொடிகாமம், நெல்லியடி ஊடாக அவரது பிறந்த மண்ணான உடுப்பிட்டிக்குப் புகழுடல் எடுத்துவரப்பட்டு வல்வெட்டித்துறை – தீருவிலில் பிற்பகல் 2 மணி முதல் 3 மணிவரை மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளது.

மாலை அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்படும் புகழுடல் நாளை திங்கட்கிழமை அவரது குடும்ப மயானமான எள்ளங்குளம் மயானத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

வவுனியா, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ள அஞ்சலி நிகழ்வுகளில் வேறுபாடுகளைக் களைந்து அனைவரையும் அணிதிரண்டு அஞ்சலி செலுத்த அழைப்பு விடுத்துள்ள பொது அமைப்புக்கள், அனைத்து இடங்களிலும் நீதி கோரியும் துக்க தினத்தை நினைவுகூரும் வகையிலும் கறுப்புக் கொடிகளைத் தொங்கவிடவும் கோரிக்கை விடுத்துள்ளன.

இன்று இறுதி நினைவஞ்சலி நடத்தப்படவுள்ள வல்வெட்டித்துறை – தீருவிலில் அனைவரையும் திரண்டு வர அழைப்பு விடுத்துள்ள பொது அமைப்புக்கள், இறுதிக்கிரியைகள் நடைபெறும் நாளை திங்கட்கிழமை குடும்பத்தவர்கள் மற்றும் ஊர் மக்கள் அஞ்சலி செலுத்தவும் ஒத்துழைக்கக் கோரிக்கை விடுத்துள்ளன.

Leave A Reply

Your email address will not be published.