இந்த தேகம் மறைந்தாலும் , இசையால் மலர்வேன் #RIPSPB

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் எவ்வளவு வற்புறுத்தினாலும் எஸ்.பி.பி-யின் வாயால் யாரையும் அன்போடுகூட குட்டு வைக்க முடியவில்லை. “ஏன் திட்டணும். Every soul is potentially divine. யாரும் உயர்ந்தவங்களும் இல்லை. தாழ்ந்தவங்களும் இல்லை.”

உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா… எஸ்.பி.பி நினைவுகள்!

தமிழ் திரை இசை உலகின் அடையாளம் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைந்துவிட்டார். எஸ்.பி.பி ஒரு தெய்வக் குழந்தை. கர்னாடக சங்கீதம் கற்காமல், பொறியியல் படிக்கப்போன ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன் அவர்! எல்லாமே கேள்வி ஞானம்தான்.

அப்பா திரு.சாம்பமூர்த்தியின் ஹரிகதைகளை (பாடலோடு கோயில்களில் கதை சொல்வது) சிறுவயதில் கேட்டு வளர்ந்தவர். ஆனால், அப்போதெல்லாம் பாடகர் ஆகவேண்டுமென்ற விருப்பம் இவருக்கு இருந்ததில்லை என்பது ஆச்சர்யம்தான்.

மெல்லிசைக் கச்சேரிகளில் பாடுவதும், பாட்டுப்போட்டிகளில் பரிசுகளை வாங்கிக் குவிப்பதையும் ஆர்வத்தோடு செய்தவர். அப்படி ஒரு பாட்டுப்போட்டிக்காக 1966-ல் சென்னை வந்து பாடி இசையமைப்பாளர் எஸ்.பி.கோதண்டபாணியிடம் முதல் பரிசு வாங்கினார் பாலு. கோதண்டபாணி இசையமைத்த தெலுங்கு படமான ‘ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மர்யாத ராமண்ணா’ படத்தில் ‘ஏமி ஈவிந்த மோகம்’ என்ற பாடலைப் பாடி திரை உலகில் அறிமுகமானார்.

எந்த எல்லைகளுக்குள்ளும் சிக்காத வித்தியாசமான குரல்வளமே எம்.ஜி.ஆர், சிவாஜி, என்.டி.ஆர், நாகேஸ்வரராவ் என இளம்வயதிலேயே எல்லைகள் தாண்டிப் பாடும் வாய்ப்பை வாங்கிக் கொடுத்தது. எந்தப் பாடகனுக்கும் ஆரம்பத்தில் உச்ச நட்சத்திரங்களுக்குப் பாட வாய்ப்புக் கிடைப்பதில்லை. எம்.ஜி.ஆரே ”எனக்கு இந்தப் பையன்தான் பாடணும்!” எனக் காத்திருந்து ‘அடிமைப் பெண்’ணில் பாட வைத்திருக்கிறார்.

எம்.ஜி.ஆர் தனக்காக பாலுவைப் பின்னணிப் பாடகராக தேர்ந்தெடுத்ததே தனிக்கதை. ஒருமுறை ஏவிஎம் ஸ்டூடியோவில் ஷூட்டிங் பிரேக்கில் காற்றுவாங்க மரத்தடியில் உட்கார்ந்திருந்தாராம் எம்.ஜி.ஆர்.

பக்கத்திலிருந்த ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் எம்.ஜி.ஆர் படமொன்றின் தெலுங்கு டப்பிங் வெர்ஷன் பாடலைப் பாடிக்கொண்டிருந்தாராம் எஸ்.பி.பி. அந்த வித்தியாசமான குரலைக் கேட்ட எம்.ஜி.ஆர் தன் உதவியாளரை அழைத்து, ”பையன் யார்னு விசாரிங்க!” என்று சொல்லியிருக்கிறார். பாலுவின் வீட்டுக்கு கார் அனுப்பி ராமாபுரம் தோட்டத்துக்கே வரவழைத்து, இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனிடம் அறிமுகப்படுத்தியிருக்கிறார். தன் வீட்டிலேயே கவிஞர் புலமைப்பித்தனின் வரிகளுக்கு பி.சுசீலாவோடு ரிகர்சல் பாடவைத்துப் பார்த்திருக்கிறார் எம்.ஜி.ஆர். கனவுபோல எல்லாம் நடந்தது பாலுவுக்கு.

“அடுத்த வாரம் ஜெய்ப்பூர் ஷூட்டிங் போறோம். இந்தப் பாட்டை ரெண்டுநாள்ல முடிச்சிடு… நல்லா பாடு சரியா?” என எம்.ஜி.ஆர் சொன்னதும் தலையாட்டிவிட்டு உற்சாகமாக வீடுவந்து சேர்ந்திருக்கிறார் பாலு. ஆனால், மறுநாள் பாலுவுக்கு டைஃபாய்டு காய்ச்சல் வந்து சேர்ந்தது.ஒருவாரம் கழித்து, சரியானவர் அவசர அவசரமாக கே.வி.மகாதேவனைப் போய் பார்க்க, ” ‘ஆயிரம் நிலவே வா’ பாட்டுதானே… மெதுவா பாடிக்கலாம். சின்னவரே சொல்லிட்டாரு” என்று எம்.ஜி.ஆர் காத்திருந்ததைச் சொல்லியிருக்கிறார்.

“ஆசை ஆசையா எனக்கு பாடப்போற தகவலை எல்லார்கிட்டயும் சொல்லியிருப்பே. ஏற்கனவே தமிழ்ல நீ பாடின முதல் பாட்டு தாமதமாகுதுனு கேள்விப்பட்டேன். ‘நீ குணமாகி வர்றவரைக்கும் காத்திருக்கலாம்னு நான்தான் சொன்னேன்’ என எம்.ஜி.ஆரே சொன்னபோது தெய்வமே வந்து சொன்னது போல இருந்தது!” என்று ‘அடிமைப்பெண்’ணில் தமிழில் தன்னை அறிமுகப்படுத்திய எம்.ஜி.ஆரை நன்றியோடு நினைவுகூர்ந்தவர் நம் பாலு!

தமிழில் அவர் பாடிய முதல் பாடல் ‘சாந்தி நிலையம்’ படத்துக்காக ‘இயற்கை எனும் இளையக்கன்னி’ என்ற பாடல்தான். ஆனால், 1969-ல் ரிலீஸில் முந்திக்கொண்டது எம்.ஜி.ஆரின் ‘ஆயிரம் நிலவே வா!’

எஸ்.பி.பியின் பாடல்களைக் கேட்காமல் தமிழர்கள் யாரும் காதலித்திருப்பார்களா என்று தெரியாது. புதிதாய் அரும்பிய காதலுக்கு, ‘காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில்…’, காதலை ஏற்பாளா என்ற தவிப்புக்கு, ‘சிலுவைகள் சிறகுகள் ரெண்டில் என்ன தரப்போகிறாய்?’ என்றும், பிரிவில் வாடும்போது, ‘காதல் ரோஜாவே… எங்கே நீ எங்கே’ என்றும் எல்லா எக்ஸ்ட்ரீம்களிலும் வெரைட்டியாக ஒவ்வொரு உணர்ச்சிகளுக்கும் ஆயிரம் பாடல்களாவது பாடியிருப்பார். அந்த வகையில் எஸ்.பி.பி மென் உணர்ச்சிகளுக்கான ஓர் ஆவணம்!

ஆனால், இது பற்றியெல்லாம் எந்தவொரு கர்வத்தையும் அவர் தன் தலைக்குள் ஏற்றிக் கொண்டதே இல்லை. “எல்லாமே இறைவன் கொடுத்தது. நான் அப்படி என்ன சாதிச்சிட்டேன்!” என உளப்பூர்வமாகப் பேசுவார்.

பாலிவுட்டில் அவர் அறிமுகம் 1981-ல் கமல்ஹாசனுக்கு பின்னணி பாட கே.பாலசந்தரின் ‘ஏக் துஜே கேலியே’வுக்காக! ஆனால், அப்படத்தின் இரட்டை இசையமைப்பாளர்கள் லக்‌ஷ்மிகாந்த்-பியாரிலால் ஜோடி, ‘மதராஸி குரல் பாலிவுட்டுக்கு செட்டாகாது!’ என்று பாலுவை கடுமையாக நிராகரித்திருக்கிறார்கள். ”படத்தில் இந்தி அதிகம் தெரியாத கேரக்டரில் கமல் நடித்திருப்பதால் எஸ்.பி.பி பாடினால் நன்றாக இருக்கும்!” என பிடிவாதமாகக் கேட்டுப் பாட வைத்தது கே.பாலசந்தர்தான். அப்படத்தில் லதா மங்கேஷ்கருடன் எஸ்.பி.பி பாடிய ‘தேரே மேரே பீச் மெய்ன்’ பாடல் அகில இந்திய அளவில் ஹிட்டாக, பாலிவுட்டிலும் தனித்த அடையாளத்தை உருவாக்கினார் பாலு.

கடவுள் கொடுத்த சங்கீதத்தோடு இங்கீதமும் தெரிந்தவர் பாலு. எந்த இடத்திலும் அவர் உணர்ச்சிவயப்பட்டு பேசி யாரையும் காயப்படுத்தியதே இல்லை. உயிரைக் கொடுத்துப் பாடியபிறகு படத்திலிருந்து தூக்கப்பட்ட பாடல்களும் இருக்கின்றன. இப்போதுபோல அப்போது ரெக்கார்டுகளிலும் இடம்பிடிக்காமல் குப்பைகளுக்குப் போகும் அந்தப் பாடல்களுக்காக அவர் சண்டை செய்ததுமில்லை.

50 ஆண்டுகளில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியிருக்கிறார். ஒரேநாளில் அசுரத்தனமாக 19 பாடல்களைப் பாடி ரெக்கார்ட் செய்ததெல்லாம் இன்றளவும் யாரும் மிஞ்ச முடியாத சாதனை. அதேபோல ஒரு பாடகர் இசையமைப்பாளராக உருமாறி வெவ்வேறு மொழிகளில் 45 படங்களுக்கு இசையமைத்ததும், டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாக இந்தியா முழுவதும் 13 நடிகர்களுக்கு குரல் கொடுத்திருப்பதும் ஆல்டைம் ரெக்கார்ட்தான்!

வெறும் எண்ணிக்கைக்காக மட்டும் பாடாமல் ஒரு பாடகராக அவர் செய்த பரிசோதனை முயற்சிகளுக்கு அளவே இல்லை. கண்டசாலாவின் குரலில் ஆரம்பித்து ஜி.வி.பிரகாஷின் குரல்வரை தன் வாய்ஸில் கொண்டு வந்து பாடுவது அவர் சிறப்பு.

எத்தனை ஏற்ற இறக்கங்களோடு, கடினமான மெட்டுகளுக்குக்குக்கூட அனாயசமாகப் பாடுவது அவர் சிறப்பு. ரஜினிக்காக எஸ்.ஜி.கிட்டப்பாவை இமிட்டேட் செய்து அவர் பாடிய ‘பாயும் புலி’ படத்தின், ‘ஆடி மாசம் காத்தடிக்க…வாடி புள்ள சேர்த்தணைக்க’ பாட்டெல்லாம் வேறுவகை. நிறைய பேர் அது மலேசியா வாசுதேவன் பாடியது என்றே இன்றும் நினைக்கிறார்கள்.

கேள்வியாக அவரிடம் கேட்டால், “கண்டசாலா இதை எல்லாத்தையும்விட பல பரிசோதனைகளை செஞ்சிருக்கார். அவர் போட்ட பிச்சைதான் என் இந்த திறமை. அவ்வளவு ஏன்… டி.எம்.எஸ் அவர்கள் எம்.ஜி.ஆர் – சிவாஜினு குரல் மாத்திப் பாடலையா..? அவங்க முன்னாடி இந்த எஸ்.பி.பிலாம் தூசு!” என்று சுய பகடி செய்திருக்கிறார்.

“இந்தப் பாட்டை உங்களைத் தவிர வேற யாருமே இவ்ளோ சிறப்பா பாடியிருக்க முடியாது” என்று அவரின் ரசிகர்கள் மேடையில் புகழ்ந்தால் பதறி மறுப்பார். “ஒரே பாடலை ரெண்டு பேர் பாடியிருந்தா, அப்ப யார் நல்லா பாடியிருக்காங்கனு தெரியும். ஆனா, இந்த ஒப்பீடு எதுக்குங்க..? நல்ல பாடலை யார் பாடினாலும் கேட்டு ரசிப்போமே!” என்பார்.

ஐஸ்க்ரீமில் செர்ரி போல நடிப்புத் திறமை என்பது அவர் நமக்குக் கொடுத்த ஸ்வீட் சர்ப்ரைஸ். மிக நல்ல நடிகர்! “ஒரு பாடகன் என்பவன், கிட்டத்தட்ட நடிகன்தான். என்ன, மைக் முன்னாடி நடிக்கிற நடிகன். நான் பள்ளி நாள்களிலேயே மேடை நடிகன்தான். இயல்பாக நடிப்பேன். அதனால் நடிப்பது சிரமமாக இல்லை. ஆனால், நல்ல அப்பா, நல்ல அண்ணன், நல்ல டாக்டர் என ஒரே மாதிரி ரோல்கள் செய்வது பிடிக்கல. தெலுங்கில் தணிகல பரணியின் இயக்கத்தில் ‘மிதுனம்’ படத்துல கிடைச்ச மாதிரி சவாலான கேரக்டர்களை எதிர்பார்த்துட்டு இருக்கேன்!” என்று தன் நடிப்பார்வத்தையும் 74 வயதில் வெளிக்காட்டியவர் பாலு.

எஸ்.பி.பியை எல்லோருக்கும் பிடிக்கக் காரணமே அவரின் எளிமைதான். 40 ஆயிரத்துக்கும் மேலான பாடல்கள்… கின்னஸ் சாதனை… 6 தேசிய விருதுகள் உட்பட ஆயிரக்கணக்கான விருதுகள். அவற்றை வைக்கவே வீட்டில் இரண்டு அறைகள் வைத்திருக்கும் மனிதர். எவ்வளவு உயரங்கள் போனாலும் சிகரங்கள் தொட்டாலும் அவர் எல்லோரிடத்திலும் அன்பாகவே இருந்தார். எளிதில் அணுகும் மனிதராக இருந்தார்.

அதேபோல உழைப்பில் பெரிதென்ன சிறிதென்ன? துளி ஈகோ பார்க்காமல் ஓடி ஓடி வேலை செய்வார் பாலு. கமலின் படங்கள் தெலுங்கில் டப்பிங் வாய்ஸ் எப்போதுமே எஸ்.பி.பி தான். ஆனால், தமிழில் ‘இந்தியன்’ படம் கமல் டப்பிங் பேசி முடித்தபிறகு ஓரிடத்தில் சின்னதாய் பேட்ச் ஒர்க் செய்ய வேண்டியிருந்தது. கவுண்டமணியை மனீஷா கொய்ராலாவின் ஒட்டகம் கடித்தபிறகு கமல் பேசும் சின்ன டயலாக் அது. கமலை அந்த ஒரு வரிக்காக அழைக்க முடியவில்லை. ரிலீஸுக்குத் தேதியும் குறித்ததால் எஸ்.பி.பியை கடைசி நேரத்தில் அவசரமாக அழைக்க குடுகுடுவென ஓடி வந்து, “அதுக்கிட்ட ஏன்டா ஸ்டொமக்கைக் காட்டுனே?” என்ற அந்த 4 வார்த்தைகளைப் பேசிக்கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார். அதுதான் பாலு!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் எவ்வளவு வற்புறுத்தினாலும் அவர் வாயால் யாரையும் அன்போடுகூட குட்டு வைக்க முடியவில்லை. “ஏன் திட்டணும். Every soul is potentially divine. யாரும் உயர்ந்தவங்களும் இல்லை. தாழ்ந்தவங்களும் இல்லை. எல்லாம் தெரிஞ்சுதான் பாடணும்னா இந்த பாலுவே கிடையாது போங்க… நம்மால முடிந்த அளவு பாசிட்டிவிட்டியை விதைப்போமே?” என்பார்.

ஆரம்பகாலங்களில் இளையராஜா ராசய்யாவாக இசைக்குழுவுக்காக இசையமைத்துக் கொண்டிருந்தபோது அக்குழுவின் ‘ஸ்டார் அட்ராக்‌ஷன்’ சினிமாவில் பாட்டுப்பாடி பிரபலமாகியிருந்த பாலுதான். ”அவன் நிராகரிச்சிருந்தா எங்க இசைக்குழு வெளி உலகுக்கு தெரியாமப் போகக்கூட வாய்ப்பிருக்கு!” என்று ராஜாவே முன்பு நன்றியோடு சொல்லியிருக்கிறார்.

நீண்ட நெடிய ஒரு இசை சகாப்தம் முடிவுக்கு வந்திருக்கிறது. அவர் உடல் மட்டும்தான் நம்மைவிட்டுப் பிரிந்திருக்கிறது. அவர் குரலின் ஆத்ம ராகமாய் நம் வாழ்வின் சந்தோஷம் துக்கம் என எல்லாவற்றிலும் சங்கீத மேகமாய் யுகங்கள் கடந்து தேன் சிந்துவார் பாலு! வி மிஸ் யூ பாலு சார்!

– ஆர்.சரவணன்
Thanks: Vikadan

Leave A Reply

Your email address will not be published.