இந்தியாவின் 6,000 ஊழியர்கள் மே மாதத்திற்குள் இஸ்‌ரேலை அடைவர்.

இஸ்‌ரேல்-ஹமாஸ் மோதலுக்கு இடையே, கட்டுமான ஊழியர்களுக்கான தட்டுப்பாட்டை இஸ்‌ரேல் சமாளிக்க இந்தியாவிலிருந்து 6,000க்கும் அதிகமான ஊழியர்கள் மே மாதத்திற்குள் அங்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

ஊழியர்களுக்கெனச் சலுகைக் கட்டணத்தில் இதற்காக விமானப் பயணங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இஸ்‌ரேல் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இஸ்‌ரேலிய பிரதமர் அலுவலகம், நிதி அமைச்சு, கட்டுமான மற்றும் வீடமைப்பு அமைச்சு ஆகியவை கூட்டாகக் கலந்தாலோசித்து எடுத்த முடிவின் விளைவாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக இஸ்‌ரேல் அரசாங்கம் ஏப்ரல் 10ஆம் தேதி அறிக்கை வெளியிட்டது.

இருப்பினும், கடந்த அக்டோபரில் போர் வெடித்ததை அடுத்து இந்த ஊழியர்களில் பெரும்பாலானோரின் வேலை அனுமதிச் சீட்டுகள் ரத்து செய்யப்பட்டன.

“குறுகியகாலத்தில் கட்டுமானத் துறைக்கென இஸ்‌ரேலுக்கு வருகைதரும் ஆக அதிகமான வெளிநாட்டு ஊழியர்கள்” என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

ஊழியர்கள் இந்தியாவிலிருந்து ஏப்ரல், மே மாதங்களில் வருவது குறித்து ஏறத்தாழ ஒரு வாரத்திற்கு முன் தீர்மானிக்கப்பட்டதாகவும் அறிக்கை கூறியது.

கட்டுமானத் துறையில் 34,000 ஊழியர்களும் தாதிமைத் துறைக்கென மேலும் 8,000 ஊழியர்களும் அமர்த்தப்படுவர் எனக் கடந்தாண்டு மே மாதம் இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

கடந்த ஆறு மாதங்களில் இந்தியாவைச் சேர்ந்த சுமார் 800 ஊழியர்கள், இஸ்ரேலின் வேளாண் துறையில் இணைந்துள்ளனர்.

இந்திய ஊழியர்களை இஸ்ரேலுக்கு அனுப்புவது குறித்து இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கடந்த வாரம் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தனது வாராந்திர செய்தியாளர் கூட்டத்தில் கூறியிருந்தார்.

முதற்கட்டமாக, கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 2) இந்தியக் கட்டுமான ஊழியர்கள் 60 பேர் இஸ்ரேலுக்குப் புறப்பட்டதாக இந்தியாவிற்கான இஸ்ரேலியத் தூதர் நவோ கிலான் தெரிவித்தார்.

“இந்த உடன்பாடு போருக்கு முன்பே கையெழுத்தானது. அவர்களின் பாதுகாப்பை நாங்கள் கருத்தில் கொண்டுள்ளோம். இந்திய ஊழியர்களின் பாதுகாப்பையும் நல்வாழ்வையும் உறுதிப்படுத்துமாறு இஸ்ரேலிய அதிகாரிகளிடத்தில் வலியுறுத்தி உள்ளோம்,” என்று திரு ஜெய்ஸ்வால் சொன்னார்.

இப்போதைக்குக் கிட்டத்தட்ட 18,000 இந்தியர்கள் பராமரிப்பு ஊழியர்களாக இஸ்ரேலில் பணியாற்றி வருகின்றனர் என்றும் அங்குள்ள இந்தியத் தூதரகம் அவர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறது என்றும் அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.