விசா மோசடி மத்திய வங்கி மோசடியை விட பன்மடங்கு அதிகம்! – ஹக்கீம் தெரிவிப்பு.

“வெளிநாட்டுப் பயணிகளிடமிருந்து மேலதிகமாக 25 டொலர்களை அறவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் 25 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தர இருப்பதாக எதிர்வுகூறப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு விசா வழங்கும் குறித்த தனியார் வெளிநாட்டு நிறுவனத்துக்கு அதன் மூலம் மாத்திரம் 6 கோடி 25 இலட்சம் அமெரிக்க டாெலர் கிடைக்கப் பெறும்.”

இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் எம்.பி.யுமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (07) உரையாற்றியபோதே மேற்கண்டவாறு கூறிய, அவர் மேலும் பேசுகையில்,

“நாட்டில் ஊழல் மாேசடிகள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் எமது நாட்டுக்குப் புதிய முறைமை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், நாட்டுக்குள் வரும் வெளிநாட்டவர்களுக்கான விசா வழங்குவதில் பாரிய மோசடி இடம்பெற்று வருவது தொடர்பில் கடந்த சில தினங்களாக ஊடகங்களில் தலைப்புச் செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஆனால், அரசு இது தொடர்பில் என்ன நடவடிக்கை எடுத்திருக்கின்றது.?

சுற்றுலாப் பயணிகளிடமிருந்து மேலதிகமாக 25 டொலர்களை அறவிட அரசு நடவடிக்கை எடுத்திருக்கின்றது. இந்த வருடத்தில் 25 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தர இருப்பதாக எதிர்வுகூறப்பட்டிருக்கின்றது. அவ்வாறு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்தால் அவர்களுக்கு விசா வழங்கும் குறித்த வெளிநாட்டு தனியார் நிறுவனத்துக்கு அதன் மூலம் மாத்திரம் 6 கோடி 25 இலட்சம் அமெரிக்க டாெலர் கிடைக்கப்பெறுகின்றது. அதாவது இலங்கை ரூபாவில் 1875 கோடி.

தற்போது இடம்பெற்றுவரும் இந்த மோசடி மத்திய வங்கி மோசடியைவிட பல மடங்கு அதிகம். அத்துடன் இந்த விசா சேவையை எஸ்.எல்.டி. மொபிடல் நிறுவனம் குறித்த நிதியில் நூற்றுக்கு நான்கு வீதத்தைப் பெற்றுக்கொண்டு வழங்குவதற்குத் தயாராக இருந்த நிலையில், வேறு வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கு இவ்வாறான பாரிய நிதியைச் செலுத்துவதால் இந்தப் பணம் யாருடைய பொக்கெட்டுக்குச் செல்கின்றது.” – என்று ஹக்கீம் எம்.பி. கேள்வி எழுப்பினார்.

Leave A Reply

Your email address will not be published.