ஜப்பான் உயர் ஸ்தானிகரின் மட்டக்களப்பு மாநகர சபைக்கான விஜயம்..!!

ஜப்பான் நாட்டின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் அகிரா சுகியாமா இன்று (29) மட்டக்களப்பு மாநகர சபைக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாராஜா சரவணபவன் உயர் ஸ்தானிகரை வரவேற்றதோடு மட்டக்களப்பு மாவட்டத்தின் பொருளாதார நிலமைகள் தொடர்பிலும், மாநகர சபையின் செயற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக மாநகர சபையினால் திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகள் பற்றியும் அவற்றை முன்னெடுப்பதற்கான நிதி அனுசரணைகள் இல்லாமை தொடர்பிலும் மாநகர முதல்வரால் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும் நிர்மாணத்துறை சார்ந்து மட்டக்களப்பு நகரிலிருந்து பெரியகளம் தீவுக்கான பாலம் அமைப்பதற்கும், இலங்கைத் தமிழர்களின் வரலாறுகளையும், தொல்லியல் உண்மைகளையும் எதிர்காலச் சந்ததியினருக்கு கற்பிக்கும் வகையில் ஓர் முப்பரிமான கலையரங்கம் (3D Auditorium) ஒன்றினை அமைப்பதற்குமான திட்ட முன்மொழிவுகளும் சமர்ப்பிக்கப்பட்டன.

அத்துடன் மாநகர தீயணைப்பு சேவையினை விஸ்தரித்து வினைத்திறனான முறையில் மேற்கொள்வதற்கும், கழிவகற்றல் வசதிகளுக்கான வாகனங்களைக் கொள்வனவு செய்து வழங்குவதற்கும் ஜப்பான் நாட்டின் உதவியினை எதிர்பார்ப்பதாகவும் மாநகர முதல்வர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகர சபையுடனான தமது உறவினை புத்தாக்கம் செய்து கொள்வதற்குரிய நல்ல வாய்ப்பாக இதனை கருதுவதோடு மட்டக்களப்பு மாவட்டத்தின் பொருளாதார அபிவிருத்திக்கும், உட்கட்டுமானம் உள்ளிட்ட நிர்மாணத்துறை சார் பணிகளுக்கும் ஜப்பான் தயாராக உள்ளதாகவும் எதிர்காலத்தில் இத்திட்டங்களை மேற்கொள்ள சகல நடவடிக்கைகளையும் தாம் மேற்கொள்வதாகவும் இதன்போது ஜப்பான் நாட்டின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் தெரிவித்தார்.

மேற்படி கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர ஆணையாளர் க.சித்திரவேல், பிரதி ஆணையாளர் உ.சிவராஜா மற்றும் ஜப்பான் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

Sathasivam Nirojan

Leave A Reply

Your email address will not be published.