மஞ்சள் கட்டிகளை சட்டவிரோதமாக வைத்திருந்தவர் கைது

மன்னார்- எருக்கலம் பிட்டியில் 952 கிலோ மஞ்சள் கட்டிகளை சட்டவிரோதமாக வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக கடத்திவரப்பட்டு பதுக்கி வைக்கபட்டிருந்த 952 கிலோ மஞ்சள் கட்டிகள் அடங்கிய மூடைகளை மன்னார் எருக்கலம் பிட்டி பகுதியில் வைத்து நேற்று (திங்கட்கிழமை) பொலிஸார் மீட்டுள்ளதோடு, சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எருக்கலம் பிட்டி பகுதியில் கடற்படை புலனாய்வு தகவலுக்கு அமைய குறித்த மஞ்சள் மூடைகள் மீட்கப்பட்டுள்ளன.

கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுல வீரசிங்கவின் பணிப்பில் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி குமார பள்லேவல தலைமையிலான பொலிஸ் பிரிவினரே குறித்த மஞ்சள் மூடைகளை கைப்பற்றி உள்ளனர்.

மேலும் மன்னார் எருக்கலம்பிட்டியை சேர்ந்த 52 வயதுடைய சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணையின் பின் சுங்கத் திணைக்களத்திடம் கைப்பற்றப்பட்ட மஞ்சளை ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.