சஜித் – அநுர நேரடி விவாதம் ஜூன் 6 ஆம் திகதிக்கு முன் நடக்குமா?

“ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களுக்கிடையிலான விவாதத்துக்கு மாத்திரமே நாங்கள் தயார். எதிர்வரும் 6ஆம் திகதிக்குப் பின்னர் விவாதம் குறித்து எந்தப் பேச்சுக்கும் நாங்கள் தயாரில்லை.”

இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் விவாத ஏற்பாட்டாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

பொருளாதாரக் குழுக்களுக்கிடையிலான விவாதத்துக்கான திகதியை தாமதிக்காமல் அறிவிக்குமாறு தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன் உறுப்பினரும் விவாத ஏற்பாட்டாளருமான நளின் பண்டார, தேசிய மக்கள் சக்தியின் விவாத ஏற்பாட்டாளர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்குக் கடந்த திங்கட்கிழமை இரண்டாவது தடவையாக அனுப்பிவைத்திருந்த கடிதத்துக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“விவாதத்துக்கு சில திகதிகளைக் குறிப்பிட்டு, அந்தத் திகதிகளில் ஒரு தினத்தில் இரண்டு கட்சிகளின் பொருளாதாரக் குழுக்களுக்கிடையில் விவாதத்தை நடத்தத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தபோதும் தேசிய மக்கள் சக்தியின் பதில் கடிதத்தில் பொருளாதாரக் குழுக்களுக்கிடையிலான விவாதம் தொடர்பாக எந்தத் தகவலும் தெரிவிக்காமல், அதன் கவனத்தை வேறு திசைக்குகே கொண்டு செல்லும் வழமையான முயற்சிகள் மூலம் இந்த இரண்டு விவாதங்களையும் நடத்தாமல் இருப்பதற்கான திட்டமாகவே இதனை நாங்கள் பார்க்கின்றோம்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன் உறுப்பினரும் விவாத ஏற்பாட்டாளருமான நளின் பண்டாரவின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் தேசிய மக்கள் சக்தியின் விவாத ஏற்பாட்டாளர் நளிந்த ஜயதிஸ்ஸ ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

“விவாதம் தலைவர்களுக்கடையில் மாத்திரமே நடத்தப்படும். அதுவும் எதிர்வரும் 6ஆம் திகதியே நடத்தப்படும். 6ஆம் திகதிக்கு அவர்கள் வராவிட்டால் அதன் பின்னர் விவாதம் தொடர்பாக எந்தப் பேச்சும் இல்லை. பொருளாதாரக் குழுக்கள் தொடர்பாகப் பேச்சும் இல்லை. தேவையற்ற வேலைகளுக்கு வர நாங்கள் தயார் இல்லை.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.