மன்னார் 2 கோடி பெறுமதியான கேரள கஞ்சா மற்றும் சட்டவிரோத மாத்திரைகள் மீட்பு.

மன்னார் 2 கோடி பெறுமதியான கேரள கஞ்சா மற்றும் சட்டவிரோத மாத்திரைகள் மீட்பு! – மூவர் கைது!

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக இலங்கைக்குள் கொண்டு வரப்பட்டு மன்னாரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 கோடி பெறுமதியான கேரள கஞ்சா தொகையினை மன்னார் பொலிசார் மீட்டுள்ள அதேவேளை ஒரு தொகுதி சட்டவிரோத மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, ஓலைத்தொடுவாய் கடற்கரை பகுதியை அண்டிய காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகளை இன்று ஞாயிற்றுக்கிழமை(18) காலை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக கடத்திவரப்பட்ட நிலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட கேரள கஞ்சா 200 கிலோ 825 கிராம் எடை கொண்டது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடற்படையினர் வழங்கிய தகவலின் அடிப்படையில், மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீர சிங்க அவர்களின் பணிப்புரைக்கு அமைவாகவும், மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.கிருஸாந்தன் அவர்களின் வழி நடத்திலின் கீழ் மன்னார் பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஆர்.டி.வீரசிங்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் இந்நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.

இக் குழுவினர் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) அதிகாலை 4.30 மணியளவில் ஓலைத்தொடுவாய் கடற்கரை பகுதியை அண்டிய காட்டுப்பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது 94 பொதிகளில் பொதி செய்யப்பட்ட 200 கிலோ 825 கிராம் எடை கொண்ட கேரள கஞ்சா பொதிகளை மீட்டுள்ளனர்.

குறித்த கேரள கஞ்சா பொதிகள் சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியானது என தெரிய வந்துள்ளது. சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில் மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.