16. இந்திய தொடர்புகளும் , இயக்கங்களின் இந்திய அனுபவங்களும் : வெற்றிச் செல்வன்

பாலஸ்தீன பயிற்சிக்கு போன கதை ….

பகுதி 16

 

மாலை ஐந்தரை மணி போல் டெல்லி பாலம் விமான நிலையத்தில் இருந்து பாகிஸ்தான் லாகூர் க்கு ஒரு மணி நேர பயணத்தில் போய் சேர்ந்தோம். அங்கு அப்போது மாலை ஆறு மணிதான்.

ஆனால் முழு இருட்டு சரியான குளிரும். சுங்க அதிகாரிகளிடம் வெற்றிலை கட்டுகளையும் விஸ்கி பாட்டில்களையும் காப்பாற்றி கொண்டு போக நாங்க பட்ட பாடு பெரும்பாடு. அப்படியும் சிலதை அவர்கள் பறித்து விட்டார்கள்.

அதே நேரம் உமாவிடம் சுங்க அதிகாரி காசு கேட்க, அவர் மறுக்க பிரச்சினையாகி விட்டது . கடைசியில் அவன் கேட்ட 10 டாலருக்குபதில் 50 டாலர் கொடுத்து வெளியில் வந்தோம்.

வெளியில் வந்த எமக்கு திக்கு திசை தெரியவில்லை. லாகூர் விமான நிலையத்திலிருந்து நகரத்துக்கு போவதற்கு முன்பு , யாழ்ப்பாணத்தில் ஓடிய தட்டிவான் போன்ற வாகனங்கள் வரிசையாக நின்றன. அதில் ஏறி நகரத்துக்குப் போய் சேர்ந்தோம்.

போகும் வழியெல்லாம் உடைந்த பாழடைந்த பெரிய பெரிய கட்டிடங்கள் இருந்தன. அவை 1965,1971காலப்பகுதியில் நடந்த இந்திய-பாகிஸ்தான் யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள் என்று பின்பு அறிந்தோம் .

நாங்கள் மாணிக்கதாசன் குறிப்பிட்ட லாட்ஜை தேடி கண்டுபிடித்து அடைய மிக நீண்ட நேரம் ஆகிவிட்டது.

நாங்கள் லாட்ஜ் போய் மாணிக்கதாசனை விசாரித்தபோது அங்கிருந்த ஒரு இலங்கைத் தமிழர் ஒருவர், தான்மாணிக்கதாசனின் நண்பர் என்றும் , தாசன் இஸ்லாமாபாத் போயிருப்பதாகவும் , அங்கு எங்கள் எல்லோரையும் குறிப்பிட்ட விலாசத்திற்கு வரச் சொல்லி இருப்பதாகவும் கூறினார்.

உமாமகேஸ்வரனுக்கு சரியான கோபம். மாணிக்கதாசனை எங்களிடம் கடுமையாகத் திட்டி கொண்டே இருந்தார். தாசனின் நண்பர் எங்களிடம் இருந்த வெற்றிலை கட்டுகள் , விஸ்கி பிராந்தி பாட்டில்களை மிக மிக ரகசியமாக வாங்கி கொண்டு போனார்.

வெகுநேரமாய் அவரை காணாததால் அவர் எங்களை ஏமாற்றி விட்டு ஓடி விட்டார் என நினைத்தோம். ஆனால் நீண்ட நேரத்தின் பின்பு அந்த நண்பர் வந்து பெரும் தொகை பணத்தை எங்களிடம் கொடுத்தார். அங்கு மதுபானம் வெற்றிலை தடை செய்யப் பட்டிருப்பதால் போலீசாரின் பிரச்சினை இருப்பதால்தான் நேரமாகிவிட்டது என கூறினார்.

நாங்கள் இரவு உணவை முடித்துவிட்டு பின்னர் , அந்த நண்பர் எங்களை இஸ்லாமாபாத் போகும் பஸ்ஸில் ஏற்றி விட்டார். இஸ்லாமாபாத்தான் பாகிஸ்தானின் தலைநகரம். கிட்டத்தட்டஇரவு 11 மணிக்கு பஸில் ஏறிய நாங்கள், காலை 5 மணிக்கு இஸ்லாமாபாத் போய் சேர்ந்தோம்.

நாங்கள் மாணிக்கதாசன் குறிப்பிட்ட ஹோட்டலை சிரமமில்லாமல் அடைந்தோம். அங்கு தூங்கிக் கொண்டிருந்த மாணிக்கதாசனை அடித்து அடித்து எழுப்பி கஷ்டப்பட்டு முழிக்க வைத்தோம். நாங்களும் டீ குடித்துவிட்டு, எமது அறைகளில் வெகு நேரம் தூங்கி விட்டோம்.

பகல் எழும்பி குளித்துவிட்டு , எல்லோரும் பகல் சாப்பிட வெளியில் போனோம். இஸ்லாமாபாத் மிகஅழகான நகரம். மிகப் பெரிய தெருக்கள் அங்கு முழுக்க அரச கட்டிடங்களாலும் , வெளிநாட்டு எம்பசியாலும் அழகுற வடிவமைக்கப்பட்ட நகரம். பகலுணவு சோறு – மாட்டு இறைச்சி அல்லது ஒட்டக இறைச்சி. நாங்கள் ஒரு வெட்டு வெட்டினோம். உமாமகேஸ்வரன் தான் சாப்பிடமிகவும் கஷ்டப்பட்டு கொண்டுஇருந்தார் அவருக்கு வெங்காயமும் வெறும் குழம்பும்தான். எல்லோரும் நடந்தே முக்கிய இடங்களைப் பார்த்தோம்.

மாணிக்கதாசன் நாங்கள் பாகிஸ்தான் வரும் முன்பு , ஆயுதங்கள் பற்றி விசாரிக்க பாகிஸ்தான் எல்லைப் புறத்தில் உள்ள பெஷாவர் என்ற இடத்துக்கு போய் வந்து இருக்கிறார். பெஷாவர் ஆப்கானிஸ்தான் எல்லையோர கிராமம். அங்கு பாகிஸ்தான் சட்டம் செல்லாது. அவர்களே தங்களுக்கு தனி சட்டம் வைத்துக் கொண்டவர்கள். அங்கு தெருவுக்கு தெரு பெட்டிக்கடைகள் போல ஆயுதங்கள் குவித்து வைத்திருப்பார்களாம். மாணிக்கதாசன் ஒரு சிறு பால் பாயிண்ட் பேனா மாதிரி ஒரு துப்பாக்கி வாங்கி வந்திருந்தார்.

அடுத்த நாள் உமா, நான்,மாணிக்கதாசன் மூவரும் சிரியன் எம்பஸ்ஸியை தேடிப் போய் டிரான்சிட் விசா கேட்டோம். லண்டன் ரிட்டன் டிக்கெட் இருந்தால் உடன் தருவதாக கூறினார்கள். நாங்கள் சிரியன் விமான நிறுவனத்துக்கு போய் கேட்ட போது ரிட்டன் டிக்கெட் இருந்தால் டிரான்சிட் விசா தேவையில்லை எனக் கூறிவிட்டார்கள்.

நாங்கள் பயணத்துக்கு ஒரு முடிவு கிடைத்தது என்ற நம்பிக்கையோடும் , சந்தோஷத்தோடும் நடந்தே மூவரும் நீண்ட தூரம் போய் விட்டோம். திரும்பி எமது ஹோட்டலுக்கு வரும்போது மாணிக்கதாசன் களைத்துப் போய் விட்டார்.

அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி லிஃப்ட் கேட்டார். ஒருத்தரும் கொடுக்கவில்லை. பொறுத்து பொறுத்து பார்த்த மாணிக்கதாசன் , அந்த வழியாக போய்க்கொண்டு சைக்கிள் காரை நிறுத்தி லிப்ட் கேட்டார் . அவர் மறுத்துவிட்டு போய்க் கொண்டிருக்க தாசன் ஓடிப் போய் அவரின் சைக்கிளின் பின் பக்கத்தில் ஏறி அவரை கட்டி பிடித்து கொண்டார்.

சைக்கிள்காரன் , மாணிக்கதாசனே கீழே தள்ளிவிட எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை . ஒரு அளவு தூரம் போய் தாசன் இறங்கிக்கொண்டார். இதைப் பார்த்த எனக்கும் , உமாவுக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை.

ஹோட்டலுக்கு வந்த பின்பு உமா லண்டன் கிளைக்கு தொலைபேசி மூலம் நிலைமைகளை கூறினார். லண்டன் கிருஷ்ணன் ரிட்டன் டிக்கெட் எடுக்க பணத்தோடு சீனிவாசன் என்ற லண்டன் தோழரை லண்டனிலிருந்து இஸ்லாமாபாத் அனுப்புவதாக கூறினார்.

அதன் பின் உமா மகேஸ்வரன் என்னை உடனடியாக டெல்லி திரும்பும்படியும், அங்குபோய் சென்னையில் உள்ளோருக்கு இந்திய பயிற்சிகள் பற்றிய சில விபரங்களை கூறச் சொன்னார். அதோடு டெல்லியில் நடக்கும் கூட்டு சேரா நாடுகளின் மாநாடு நடக்கும்போது அந்த நேரத்தில் வெளிநாட்டு எம்பஸிகளுக்கு கொடுக்க வேண்டிய புத்தகங்களை எல்லாம் ரெடி பண்ணவும் சொன்னார்.

மாணிக்கதாசன் என்னை விமானத்தில் திரும்பப் போக வேண்டாமென்றும் தரைவழியாக டெல்லிபோகும் படியும் கூறினார். காரணம் காசும் மிச்சம், புதிய புதியஅனுபவங்களும் வாழ்க்கையில் கிடைக்கும் என்றார்.

மாணிக்கதாசன் நல்ல தைரியசாலி, நல்ல ஒரு போராளியாக வந்திருக்க வேண்டியவர். மாணிக்கதாசன் , கந்தசாமி போன்றவர்களுக்கு ஒரு சிறந்த தலைவர் கிடைத்திருந்தால் அவர்கள் வாழ்க்கையே மாறி இருக்கும். அவர்களின் திறமையை உமா மகேஸ்வரன் பயன்படுத்தாமல் இவர்களை மனித விரோத செயல்களுக்கு பயன்படுத்தியதால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இவர்களின் பங்கு துரோக தனமாக பார்க்கப்படுகிறது.

நான் இஸ்லாமாபாத்தில் இருந்து லாகூர் வந்து, பாகிஸ்தான் – இந்திய எல்லைப்பகுதியான அட்டாரி என்ற இடத்துக்கு வந்து , அதிகாலை முதல் பயணியாக இந்திய பகுதிக்கு வந்தேன்.

பாகிஸ்தான் அதிகாரிகள் எனது பாஸ்போர்ட் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் இந்திய அதிகாரிகள் கள்ள விசாவை பிடித்து விட்டார்கள். என்னைப் பிடித்த சீக்கிய அதிகாரி இரண்டு மணி நேரம் நிற்க வைத்துவிட்டு , பின்பு காலை உணவும் டீயும் வாங்கி கொடுத்து, அனுப்பினார்.

பஞ்சாப் அமிர்தசரஸ் போய் அங்கிருந்து டெல்லிக்கு பஸ் எடுக்க வேண்டும். அந்த சீக்கிய அதிகாரி அமிர்தசரஸ் போகும் போது சீக்கிய கோயிலுக்கு போய் கும்பிட்டுவிட்டு அங்கேயே சாப்பிட்டுவிட்டு டெல்லிக்கு போக சொன்னார்.

அவர் சொன்ன மாதிரியே , தங்க முலாம் பூசிய தங்கக் பொற் கோயிலையும் தரிசனம் செய்துவிட்டு சாப்பிட்டு வந்தேன். இந்த அனுபவம் மறக்க முடியாதது.

எமது தோழர்களின் முதல் வெளிநாட்டு பயிற்சி பயணம் பல கஷ்டங்களில் மத்தியில் நல்ல முறையில் முடிந்தது. ஒரு வாரத்தின் பின்பு உமா மகேஸ்வரன் திரும்ப டெல்லி வரும்போது, நான் பாகிஸ்தானில் இருந்து திரும்பி வந்த என்னை சந்தித்து , அங்கு நடந்த கதைகளைக் கூறினார்.

லண்டனிலிருந்து சீனிவாசன் வந்ததாகவும், தாசன் எல்லோருக்கும் ரிட்டன் டிக்கெட் செய்து கூட்டிக்கொண்டு போய் டமஸ்கஸில் விமானம் மாறுவதற்கு முன்பு வெளியில் அவர்களைக் கூட்டி போக வந்த PFLP ஆட்களுடன் சேர்ந்து , அவர்களைக் கூட்டி போனதாக கூறினார்.

மாணிக்கதாசன் , ஏனைய தோழர்கள் போவதற்கு முன்பு தான் தனியாக போய் விட்டதாக கூறினார். சீனிவாசன் , உமா மகேஸ்வரனின் கள்ள பாஸ்போர்ட்டை பார்த்துவிட்டு அவரை அந்த பாஸ்போர்ட்டில் போக விடவில்லையாம். சிரிய அதிகாரிகள் மோசமானவர்கள். கள்ளபாஸ்போர்ட்டை கண்டு பிடித்தால் தூக்கி ஜெயிலில் போட்டு விடுவார்கள். அதனால் விடமாட்டேன் என்று கூறி , சீனிவாசன் தனது லண்டன் விசாவில் உள்ள ஒரிஜினல் புத்தகத்தை கொடுத்து அப்படியே போய்வர சொன்னார்.

சீனிவாசனின் முகம் பாஸ்போர்ட்டில் பெரிய தெளிவாக இருக்கவில்லைம். கிட்டத்தட்ட உமா மகேஸ்வரனின் முகம்போலத்தான் இருந்ததாம். தாசன் நீண்ட ஆராய்ச்சிக்கு பின் ஓகே சொல்லி இருக்கிறார். உமாவும் ஒரு பிரச்சனையும் இல்லாமல் சிரியா போய் திரும்பி , இஸ்லாமாபாத் வந்து சீனிவாசனிடம் பாஸ்போர்ட்டை கொடுத்துவிட்டு , சீனிவாசன் லண்டன் போக , உமா தனது பாஸ்போர்ட்டை எடுத்துக்கொண்டு டெல்லி வந்தார்.

இந்த சம்பவங்கள் நடந்த காலம் 1983 அக்டோபர் மாதக் கடைசி அல்லது நவம்பர் மாத முற்பகுதியில் என நினைக்கிறேன்.

தொடரும் …..


அனைத்து பதிவுகளையும் படிக்க இங்கே அழுத்தவும்

Leave A Reply

Your email address will not be published.