யாழ். மாநகர சபை உறுப்பினர் பதவியில் இருந்து மணி நீக்கம்.

யாழ். மாநகர சபை உறுப்பினர் பதவியில் இருந்து மணி நீக்கம்.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்புரிமையில் இருந்து சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார் என்று யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் இ.கி.அமல்ராஜ் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் உறுப்புரிமை முடிவுறுத்தப்பட்டுள்ளது என அந்தக் கட்சியின் பொதுச்செயலாளரால் கடந்த 13ஆம் திகதி கடிதத்தின் ஊடாக அறிவிக்கப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனச் சட்டத்தரணி வி.மணிவண்ணனுக்கு யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் தெரிவத்தாட்சி அலுவலகருக்கு அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ற அரசியல் இயக்கத்துடன் இணைந்து பயணிக்கின்றது. அதனடிப்படையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சிபாரிசின் அடிப்படையில் 2018ஆம் ஆண்டு  நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் விஸ்வலிங்கம் மணிவண்ணன், எமது கட்சியின் நியமன உறுப்பினராக யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு நியமிக்கப்பட்டார்.

எனினும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஒழுக்காற்று நடவடிக்கையால் விஸ்வலிங்கம் மணிவண்ணன், அந்தக் கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். அதனால் அவரை யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்புறுப்புரிமையிலிருந்து நீக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.