தமிழரசுடன் இணைய விரும்பும் கஜேந்திரகுமாரை அரவணைக்க நாங்கள் தயார்! – யாழ். கிட்டு பூங்கா இறுதிப் பரப்புரை கூட்டத்தில் சுமந்திரன் இப்படி தெரிவிப்பு.

ம்மோடு கைகோர்க்கத் தயார் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நெல்லியடியில் வைத்து சொல்லியிருக்கின்றார். நல்ல விடயம். இரு கரம் நீட்டி அவரை அரவணைக்க நாம் தயாராக இருக்கின்றோம்.”

இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், கிட்டு பூங்காவில் நேற்று இடம்பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இறுதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

“யாழ்ப்பாணம் எங்கள் இருப்பின் அடையாளம், தமிழ் மக்களின் கலாசார அடையாளம். இலங்கைத் தமிழர்களை, வெளிநாடுகளுக்கு எங்கு சென்றாலும் யாழ்ப்பாணத் தமிழன் என்பார்கள். அது எங்களுடைய மொழி, கலாசாரத்தின் அடையாளமாக இருக்கின்றது. இன்று யாழ்ப்பாணத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பியுள்ளவர்களைப் பற்றி பலவிதமான கேலியான விடயங்கள் உலா வருகின்றன. கல்விக்குப் பெயர்போன கல்விச் சமூகம் செறிந்த இந்த மண்ணிலே இருந்து இவர்கள் எப்படி பிரதிநிதிகளாகப் போனார்கள் என்ற கேள்வி எழுகின்றது.

ஒருவர் சொல்கின்றார் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை என்றார் மேற்படி நபர். சரி அவருக்கு கணக்குத்தான் தெரியாது என்றால் புவியியலும் தெரியாது. இந்த விடயங்களைச் சுட்டிக்காட்டினால் அவர்களது ரவுடி அமைச்சர் , அவரை ரவுடி அமைச்சர் என்பதற்குக் காரணம் ரவுடித்தனமாகச் செயற்படுகின்றார் என்றபோது அவர் அதனை மறுக்கவில்லை, அடுத்த நாள் நானும் ரவுடிதான் எனச் சொல்லி ஒத்துக்கொள்கின்றார். அவர் ஒத்துக்கொண்ட காரணத்தினாலேயே அவருக்குப் பிடித்த அடைமொழியாக இருக்கின்றது. அவருக்கு வேறு அடைமொழி் பாவிக்க முடியாது. அதனால் உங்களுக்குத் பிடித்தமான ரவுடி அமைச்சர். இந்த ரவுடி அமைச்சர் சொல்லுகின்றார் சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் வேட்டி கட்டுறார், கொழும்பில் கால் சட்டை போடுகின்றார் என்கின்றார். நான் என்ன ஆடையில் இருந்தாலும் உங்களுக்கு என்ன ஐயா வருத்தம். எனக்கு வழக்குத் தாக்கல் செய்யத்தானே தெரியும் என்கின்றார் அவர். ஆம் எனக்கு வழக்குத் தாக்கல் செய்யத் தெரியும்.

உங்களுடைய கட்சி இதுவரைக்கும் ஊழலுக்கு எதிராகத் தாக்கல் செய்த அனைத்து வழக்குகளிலும் என்னைத்தான் சட்டத்த்ணியாக நியதித்திருக்கின்றார்கள். உங்களுக்கு அது தெரியுமோ தெரியாது. உங்களுக்கு அது தெரிய வாய்ப்பில்லை. உங்களது கட்சித் தலைவர்களிடம் கேளுங்கள் ஊழலுக்கு எதிரான வழக்குகளில் ஏன் சுமந்திரனைச் சட்டத்தரணியாக நியமித்துள்ளீர்கள் எனக் கேளுங்கள்.

மார்ச் மாதமும் சீனி ஊழல் தொடர்பான வழக்கு வந்தது. அதில் சுனில் ஹந்துன்நெத்தி அமைச்சர்தான் மனுதாரர். அவர் சார்பில் நீதிமன்றில் ஆஜராக வாதாடுபவர் நான்.

ஊழலுக்கு எதிராக அது உங்களுடைய கட்சியானாலும் எவரது கட்சியானாலும் முதலிலே வாதாடுவதற்கு என்னைத்தா ன் நிறுத்துகின்றார்கள். சத்ருரங்க அபயசிங்க என்னும் உங்களது பிரதி அமைச்சர் உள்நாட்டு கடன் மறுசீரமைப்புச் செய்யப்பட்டபோது இந்த நாட்டுத் தொழிலாளர்களின் சேமலாப நிதியைத் திருடுவதற்கு ஒப்பானது எனச் சொல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தபோது அவருக்காகவும் ஆஜராகினதும் நான்தான் ஐயா.

ஊழியர்களின் சேமலாப நிதியை எடுத்து கடன் மறுசீரமைப்பை ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டதற்கு எதிரான வழக்கில் என்னை அழைத்து. வாதாடச் சொன்நீர்கள். இன்று அதேகடன் மறு சீரமைப்பை நீங்கள் தொடர்ச்சியாக கொண்டு செல்கின்றீர்கள். தொழிலாளர்களை சுரண்டுவதாக நீங்களே சொன்ன அதே விடயத்தை ஒருவித மாற்றமும் இல்லாமல் தொடர்ச்சியாக நீங்கள் கொண்டு செல்கின்றீர்கள்.

தேர்தலின் முன்பு இது எல்லாம் மாற்றி அமைப்போம் என்றீர்கள். ஒரு வசனம் கூட மாற்றப்படவில்லை அப்படியே கொண்டு செல்லப்படுகின்றது. முதலாளித்துவ ஒப்பந்தம் என்றீர்கள், நீங்கள் தொழிலாளர் வர்க்கம் என்று சொன்னீர்கள். ஆனால்,அந்த முதலாளித்துவ ஒப்பந்தத்தையே கொண்டு செல்கின்றீர்கள். இது ஊழல் இல்லையா?.

ஊழலுக்கு எதிரானவர்களாக உங்களைக் காட்டிக்கொண்ட நீங்கள் இன்று நீங்கள் செய்கின்ற ஊழல் மிக மோசமான ஊழல். ஒருவரைச் சபாநாயகராக நியமித்தீர்கள். அவர் தன்னைக் கலாநிதி என்று சொல்லிக்கொண்டார். அதைக் கேள்வி கேட்டவுடன், “கலாநிதி சான்றிதழை தவற விட்டுவிட்டேன். எனது பல்கலைக்கழகத்தில் இருந்து எடுக்க வேண்டும். அதுவரை பதவி விலகுகின்றேன்.” என்றார்.

இது நடந்தது டிசம்பர் மாதம். நான்கு மாதங்கள் கடந்து விட்டன. இன்னமும் கலாநிதிப் பட்டம் வரவில்லை இது ஊழல் இல்லையா? நீங்கள் உங்களது 159 பேரில் தெரிந்து எடுத்து நாட்டின் 3 ஆவது பிரஜையாக நியமிப்பதற்கு தெரிந்தெடுத்த நபர் கையும் களவுமாக பிடிபட்ட பிறகு அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியிருக்க வேண்டும். உங்கள் கட்சி அவரைக் கட்சியில் இருந்தே துரத்தியிருக்க வேண்டும். ஏன் இன்னும் செய்யவில்லை? மக்களை முட்டாள் ஆக்குகின்றனர்.

இவ்வாறான இன்னுமோர் ஊழலை நாம் சுட்டிக்காட்டியபடியால் விரிவுரையாளர் கபிலனையும் வைத்துக்கொண்டு அந்த அமைச்சர் ஊடகவியலாளர் மாநாடு நடத்தியுள்ளீர்கள். யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான வேட்பாளர் மனுவிலே விரிவுரையாளர் கபிலன் தனது வதிவிடமாக எந்த முகவரியைக் கொடுத்திருக்கின்றார். அரியாலையில் உள்ள உங்களது காரியாலய முகவரியைத் தனது வதிவிடமாகப் பொய்யாகச் சொல்லியிருக்கின்றார் மிகப் பெரிய ஊழல்வாதி. அவர் ஏழாலையில் இருக்கின்றார் என உங்களது முதலாவது எம்.பி. சொல்கின்றார்.

“யாழ்ப்பாணம் ஏழாலையில்தானே இருக்கின்றது. ஆகையினால் தேர்தல் கேட்கலானே என உளறுகின்றார். அவர் ஏழாலையில்தான் இருக்கின்றார் என எல்லோருக்கும் தெரியும். அவரது முகவரி, வாக்கு எல்லாம் ஏழாலையில்தான் இருக்கின்றது. யாழ். பல்கலைக்கழகத்திலும் அவரது முகவரியைப் பாருங்கள். அரியாலையா இல்லையே. ஏன் இந்தப் பொய்யுரை. வேட்பு மனுவிலேயே பொய்யான தகவலைக் கொடுத்த ஊழல்வாதியை உங்களது மாநகர நேயர் வேட்பாளர் என அறிவிக்கின்றீர்கள். உங்களுக்குச் சட்டம் தெரியாது என்பதற்கு நாங்கள் என்ன செய்வது?

கடந்த உள்ளூராட்சி மன்றக் காலத்திலே இதே யாழ்ப்பாணம் மாநகர சபையிலேயேதான் சபையின் எல்லைக்கு வெளியே இருந்த ஒருவர் ஒரு றோட்டுக்கு வெளியில் கொக்குவிலில் இருந்தவர் மாநகர சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டபோது நாங்கள் வழக்குத் தாக்கல் செய்து அவரை வெளியேற்றினோம். வழக்குக் கொப்பியும் உண்டு எங்களுக்கு வழக்குத் தாக்கல் செய்யத் தெரியும். 217/18 இலக்க வழக்கு இடம்பெற்றது. 3 வருடங்கள் வெளியே வைத்திருந்தோம்.

ஏன் தன்னுடைய வதிவிடத்தை பொய்யாக உரைத்தமையால். வேட்புமனுவிலே ஒரு பொய்யான முகவரியைக் கொடுத்தால் தப்பி விடலாம் என எண்ணி விட வேண்டாம். இதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அவர் சபை அமர்வுகளில் பங்குகொள்ளவோ, வாக்களிக்கவோ முடியாது என இடைக்காலக் கட்டளையைக் கொடுத்தது. ரவுடி அமைச்சருக்கு இதைப் படித்து விளங்க முடியுமோ தெரியாது.

இதைக் கேட்டால் கொழும்பில் இருக்கும் சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் தேர்தல் கேட்கலாம் என்றால் ஏழாலையில் இருப்பவர் ஏன் யாழ்ப்பாணம் மாநகர சபையில் தேர்தல் கேட்க முடியாது, யாழ்ப்பாணமும் ஏழாலையில்தானே இருக்கின்றது என ஒருவர் சொல்கின்றார்.

நாடாளுமன்ற சட்டத்திலோ, மாகாண சபை சட்டத்திலோ இப்படியான தேவைப்பாடு கிடையாது. ஆனால், உள்ளூராட்சி மன்ற சட்டத்திலே இந்தச் சிறப்பான மிகத் தெளிவான சட்டத் தேவைப்பாடு பிரிவு 7 மற்றும் 8 இல் இருக்கின்றது. அதைத் தெரிந்துகொண்டுதான் ஒரு பொய்யான முகவரி கொடுக்கப்பட்டுள்ளது. ஐயா ரவுடி அமைச்சரே நான் யாழ்ப்பாணத்தில் பிறந்தவன் கஜேந்திரகுமாரைப் போலவோ, விக்னேஸ்வரனைப் போலவோ கொழும்பிலே பிறந்தவனும் அல்ல. எனது யாழ்ப்பாணம் பூர்வீகத்தைக் கேள்வி கேட்க இவர்கள் யார், அவர்களது பூர்வீகத்தை நாங்கள் கேள்வி கேட்கவில்லை. தமிழ் பேசுகின்ற மக்கள் மலையகத்தில் இருந்தாலும் அது முஸ்லிமாக இருந்தாலும் தமிழ் பேசுகின்ற மக்களுக்கு உரித்த கட்சியாகத்தான் இலங்கைத் தமிழரசுக் கட்சி என்றும் இருந்திருக்கின்றது. என்னை மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர் என்கின்றார் அந்த அமைச்சர்.

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாருக்குக் கிடைத்த அளவு வாக்கு எனக்கும் கிடைத்தது என்பதை அந்த அமைச்சர் புரிந்துகொள்ள வேண்டும்.

யாழ்ப்பாணத்திலே வந்து தேர்தலில் நிற்கத் திராணி இல்லாத ஒருவர் கடந்த காலத்திலும் தற்போதும் தேசியப் பட்டியலில் வந்து யாழ்ப்பாணத்து பூர்வீகத்தைக் கேள்வி கேட்கின்றார் என்றால் இவரை என்ன செய்வது?

மலையக மக்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டமைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த தந்தை செல்வநாயகம் தன்னுடைய கட்சியை இரண்டாக உடைத்தார். யாருக்காக மலையக மக்களுக்காக. அந்த உறவுகளுக்காக நாம் எப்போதும் எழுந்து நிற்போம். யாழ்ப்பாணம் மக்கள் ஒரு ரவுடியைத் தொடர்ந்து அமைச்சராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

யாழ்ப்பாணத்துக்கு ஏற்பட்டுள்ள அவமானத்தைப் போக்குவதாக இருந்தால் மக்களின் வாக்குகள் பேச வேண்டும். உங்கள் வாக்குச்சீட்டில் நீங்கள் இடும் புள்ளடி அதனைச் சொல்லும்.

தந்தை செல்வநாயகத்தின் வழியிலே தொடர்ந்து நடப்போமாக இருந்தால் எம்மோடு கை கோர்க்கத் தயார் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நெல்லியடியிலே வைத்து சொல்லியிருக்கின்றார். நல்ல விடயம். இரு கரம் நீட்டி அவரை அரவணைக்க நாம் தயாராக இருக்கின்றோம். எமது கட்சியின் தலைவருடைய அனுமதியோடு நான் இதனைச் சொல்லுகின்றேன்.

ஏனெனில் சேர்ந்து பயணிப்பதற்காக அவர் அனைவரின் வீடுகளுக்கும் சென்றார். ஒற்றுமைக்கு நாங்கள் பங்கம் விளைவிப்பவர்கள் அல்லர். கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்குத் தெளிவாகச் சொல்லும் செய்தி ஆம் நீங்கள் அப்படியாகச் சொன்னதை நாங்கள் வரவேற்கின்றோம், சேர்ந்து பயணிக்க நாங்கள் தயார். தந்தை செல்வநாயகத்தின் வழியிலே தொடர்ந்து நடப்போமாக இருந்தால் என்பதில் ஒரு நெருடல் இருக்கின்றது. தந்தை செல்வநாயகத்தின் வழியிலே செல்லாமல் விட்டது நாங்களா, நீங்களா?

சமஷ்டி என்கின்ற இணைப்பாட்சி அல்லது கூட்டாட்சி என்கின்ற பெயரையே வைத்திருக்கின்ற கட்சி எங்களுடைய கட்சி. அதை ஏளனம் செய்தவர்களில் முதன்மையானவர்கள் நீங்கள்தானே. பழையதைப் பேசுவதாக எண்ண வேண்டாம். அவர் கூறியதனால் பேசினேன். அதுவும் சேர்ந்து பயணிக்க வருபவருக்கு எதிராகப் பேசுவதாக நினைக்க வேண்டாம்.

2010 ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்து வெளியேறிய முதலாவது கட்சி கஜேந்திரகுமாரின் கட்சி என்று சற்று முன் சிறில் அண்ணையும் கூறினார். ஒற்றுமைக்கு நாம் எதிர்ப்புக் கிடையாது என்பதற்காகவே இதனைக் கூறுகின்றேன்.

எமது கட்சியில் யார் தலைவராக, செயலாளராக இருக்க வேண்டும் என நீங்கள் உங்களது கூட்டத்தில் வைத்து கூறுகின்றீர்கள். உங்களது கட்சியில் யார் தலைவராக இருக்க வேண்டும் என நாங்கள் சொல்கின்றோமா?. பொன்னம்பலம் என்று பெயர் இருந்தால்தான் உங்கள் கட்சியில் தலைவராக இருக்க முடியும். இதை எப்ப என்றாலும் நாம் இதுவரை சொல்லி இருக்கின்றோமா?.

எங்களது கட்சியில் தந்தை செல்வநாயகம் உயிரோடு இருந்தபோதே சி.மு.இராசமாணிக்கம், இராஜவரோதயம், வன்னியசிங்கம், நாகநாதன், அமிர்தலிங்கம் போன்றோர் தலைவராக இருந்தனர். இந்தத் தெளிவுகள் அவசியம். தந்தை செல்வா வழியிலேயே நாம் நடக்கின்றோம். டட்லி – செல்வா ஒப்பந்தம், பண்டா – செல்வா ஒப்பந்தம் – அந்த இரு ஒப்பந்தங்களில் எங்குமே சமஷ்டி என்ற சொல் கிடையாது. சொற்களிலும் பெயர் பலகைகளிலும் தொங்கிகொண்டு இருப்பவர்கள் அல்ல நாங்கள். உள் அடக்கம் உண்டா எனப் பார்ப்பவர்கள் நாங்கள். ஒரு கட்சி சமஷ்டியைக் கோரும் உரிமை உண்டு என்கின்ற வரலாற்று முக்கியம் வாய்ந்த தீர்ப்பைப் பெற்றவர்களே நாங்கள்தான்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.