அநுர அரசு அதிக வாக்குகளைப் பெற்றாலும் 164 சபைகளில் மட்டுமே ஆட்சியமைக்க முடியும் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சுட்டிக்காட்டு.

“அநுர அரசு பெற்றுக்கொண்ட வாக்குகள் வெறும் இலக்கங்களாக மாத்திரமே உள்ளன. அதிகாரம் எதிர்க்கட்சிகளிடமே உண்டு. 164 உள்ளூராட்சி மன்றங்களில் மாத்திரமே அரசுக்கு ஆட்சியமைக்க முடியும். 170 மன்றங்களில் அரசால் ஆட்சியமைக்க முடியாது. கட்சி பேதங்களை மறந்து சகல எதிர்க்கட்சிகளுடனும் இணைந்து 170 உள்ளூராட்சி மன்றங்களை அமைப்பதற்குத் தயார்.”
இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“அநுர அரசு கூறுவது பொய் என்பது தமக்குத் தெரியும் என்பதை மக்கள் இந்தத் தேர்தலில் உணர வைத்திருக்கின்றனர். நாடாளுமன்றத்தில் 159 பெரும்பான்மையைக் கொண்டுள்ள இந்த அரசுக்கு மக்கள் இந்தச் செய்தியை வழங்கியிருக்காவிட்டால் அடுத்த 4 ஆண்டுகளுக்கும் இவர்களின் பொய்கள் தொடர்ந்திருக்கும். எவ்வாறிருப்பினும் மக்கள் அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றனர்.
தற்போது அநுர அரசு பெற்றுக்கொண்ட வாக்குகள் வெறும் இலக்கங்களாக மாத்திரமே உள்ளன. அதிகாரம் எதிர்க்கட்சிகளிடமே உண்டு. 164 உள்ளூராட்சி மன்றங்களில் மாத்திரமே அரசுக்கு ஆட்சியமைக்க முடியும். 170 மன்றங்களில் அரசால் ஆட்சியமைக்க முடியாது. ஜனாதிபதியும், பிரதமரும் மக்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த போதிலும், அவை நடைமுறையில் சாத்தியப்படவில்லை.
ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் செயலாளர் ரில்வின் சில்வா வேறு எந்தக் கட்சிகளின் ஆதரவும் தமக்குத் தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளார். அவர்கள் கோரினாலும் ஆதரவளிப்பதற்கு நாம் தயாராக இல்லை என்பதை ரில்வின் சில்வாவிடம் தெரிவித்துக்கொள்கின்றோம். பொய் கூறி மக்களை ஏமாற்றும் உங்களுடன் இணைய வேண்டிய தேவைய எமக்கில்லை. ஆனால், கட்சி பேதங்களை மறந்து சகல எதிர்க்கட்சிகளுடனும் இணைந்து 170 உள்ளூராட்சி மன்றங்களை அமைப்பதற்கு நாம் தயார்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் 67 இலட்சம் வாக்குகளை அரசு பெற்றுக்கொண்டது. ஆனால், இம்முறை தேர்தலில் 40 இலட்சம் வாக்குகள் மாத்திரமே கிடைத்துள்ளன. 6 மாதங்களில் 27 இலட்சம் மக்கள் சகோதரர் அநுரகுமார திஸாநாயக்கவை நிராகரித்துள்ளனர். எனவே, இனியாவது பொய் கூறுவதை நிறுத்துங்கள். ஆர்ப்பாட்டத்தின் மூலம் கோட்டாபய ராஜபக்ஷவைத் துரத்தியதைப் போன்று ஆட்சியைக் கவிழ்ப்பது எமது நோக்கமல்ல. அநுர அரசு அதன் தவறுகளைத் திருத்திக் கொண்டு ஆட்சியை முன்னெடுக்க வேண்டும்.” – என்றார்.