காணி பற்றிய வர்த்தமானி: எம்.பிக்களிடம் பிரதமர் வழங்கிய வாக்குறுதி என்ன?

வடக்கு மாகாணத்தில் சுமார் 5 ஆயிரத்து 700 ஏக்கர் வரையான காணிகள் தொடர்பில் கடந்த மார்ச் 28ஆம் திகதி வெளியான வர்த்தமானி குறித்து அமைச்சரவை மட்டத்தில் பேசி அடுத்த நாடாளுமன்ற அமர்வின்போது நடைபெறும் சந்திப்பில் பதில் அளிக்கப்படும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உறுதியளித்துள்ளார்.
வடக்கு, கிழக்கில் நிலவும் காணிப் பிரச்சினைகள் தொடர்பான கூட்டம் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் மக்கள் பிரதிநிதிகளுடன் வடக்கு, கிழக்கு மாகாண மாவட்ட அரச அதிபர்கள், திணைக்கள அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது, “வடக்கு மாகாணத்தில் காணிகளைச் சுவீகரிப்பது தொடர்பில் கடந்த மார்ச் 28ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானியை மீளப் பெற வேண்டும். பொதுமக்களின் காணிகளையும் அரச காணிகளையும் வேறுபடுத்துவது என்பது கடினமான காரியம். காணிகளின் உரிமையாளர்கள் பலர் வெளிநாடுகளில் உள்ளனர். நாட்டில் இன்னமும் பயங்கரவாதத் தடைச் சட்டம் நடைமுறையில் இருப்பதால் அவர்களில் பலர் நாடு திரும்ப முடியாத நிலையிலுள்ளனர். வர்த்தமானியில் பிரகடனப்படுத்தியதன்படி பல காணிகள் கரையோரத்திலுள்ளன. 2004இல் ஏற்பட்ட சுனாமியால் பலரின் ஆவணங்கள் அழிவடைந்து போய்விட்டன. எனவே, இந்த வர்த்தமானியை மீளப் பெறவேண்டும்.” – என்று வலியுறுத்தியதுடன், அதிலுள்ள சட்டப் பிரச்சினைகளையும் இந்தச் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களானகஜேந்திரகுமார் பொன்னம்பலம், நிஷாம் காரியப்பர்ஆகியோர் முன்வைத்தனர்.
தொடர்ந்து,“அரசு அடாத்தாகக் காணிகளை அபகரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பொதுமக்களின் காணிகளை அவர்களிடமே வழங்க வேண்டும்.” – என்று சிவஞானம் சிறீதரன் எம்.பி. கூறினார்.
தொடர்ந்து, வவுனியா மாவட்டத்தில் அபகரிக்கப்படும் காணிகள் தொடர்பில் ப.சத்தியலிங்கம் எம்.பியும், திருகோணமலை மாவட்டத்தில் அபகரிக்கப்படும் காணிகள் தொடர்பில் ச.குகதாசன் எம்.பியும், முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவளத் திணைக்களம் உள்ளிட்ட திணைக்களங்களால் அபகரிக்கப்படும் காணிகள் தொடர்பில் து.ரவிகரன் எம்.பியும் கூறினர்.
எனினும்,இடையிலேயேஇதனை நிறுத்திய பிரதமர்,”பிரதானமாக வடக்கில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட காணி தொடர்பில் பேசவே இந்தச் சந்திப்பு கூட்டப்பட்டது. நேரத்தைக் கருத்தில்கொண்டு அது தொடர்பிலேயே கலந்துரையாடுவோம்.” – என்று கூறினார்.
இதனிடையே, சந்திப்பில் பங்கேற்றிருந்த காணி, திணைக்களங்களின் அதிகாரிகள் வர்த்தமானி மீளப்பெறப்பட வேண்டும் என்ற கருத்தைக் கடுமையாக எதிர்த்தனர். “காணி ஆவணங்கள் இல்லையென்றால் மின் பட்டியல், வரி தொடர்பான ஆவணங்கள் அல்லது வேறு ஆவணங்களில் ஏதேனும் ஒன்றையேனும் மக்கள் ஆதாரமாகக் காட்ட முடியும்.” – என்று அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், “நாட்டுக்கு வர முடியாத சூழ்நிலையிலுள்ளவர்கள்மெய்நிகர் வழியில் தொடர்பு கொள்ள முடியுm. கிராம சேவகர் மூலம் காணியை உறுதிப்படுத்தலாம். உறவினர்கள் ஊடாக காணி ஆவணத்தை சமர்ப்பிக்க முடியும். எனவே, வர்த்தமானியை மீளப்பெற முடியாது.” – என்றும் அவர்கள் கூறினர்
இதன்போது, “100 வருடங்களுக்கு முந்தைய காணிகளை அடையாளப்படுத்த இந்த நடவடிக்கை என்று கூறப்படுகின்றது. அப்படியானால் தற்போதைய ஆவணங்கள் ஏற்கப்படுமா? அரச மற்றும் தனியார் காணிகளை அடையாளப்படுத்தவே இந்த நடைமுறை என்றால் எதற்காக பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தாமல் 3 மாத காலத்துக்குள் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அரசியல்வாதிகளும் ஊடகங்களும் இந்த விடயத்தை வெளிப்படுத்திய பின்னர்தான் இந்த விடயம் மக்களுக்குத் தெரியவந்துள்ளது. இன்னும் ஒரு மாத காலத்துக்குள் ஆவணங்களைச் சமர்ப்பிக்க முடியாது. மக்களுக்குப் பகிரங்கப்படுத்தாமல் வர்த்தமானியை வெளியிட்டதன் நோக்கம் என்ன?.” என்று கஜேந்திரகுமார் எம்.பி., நிசாம் காரியப்பர் எம்.பி. ஆகியோர் அதிகாரிகளைக் கேட்டனர். அவர்களின் இந்தக் கேள்விக்கு அதிகாரிகள் பதிலளிக்கவில்லை.
இதைத் தொடர்ந்து, “பொதுமக்களின் காணிகளை ஆக்கிரமிக்கும் நோக்கம் எமக்கு இல்லை. பொதுமக்களின் காணிகளிலிருந்து அரச காணிகளை வேறுபடுத்துவதே நோக்கம். அரச காணிகளில் பொது நோக்கிலான அபிவிருத்தித் திட்டங்களே மேற்கொள்ளப்படும்” – என்று தெரிவித்த பிரதமர் ஹரிணி, “இந்த வர்த்தமானி தொடர்பாக அடுத்த நாடாளுமன்ற அமர்வுக்குள் – அமைச்சரவையில் பேசி முடிவு ஒன்று எட்டப்படும். அடுத்த நாடாளுமன்ற அமர்வின்போது மீண்டும் உங்களை (வடக்கு – கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை) சந்திக்கும்போது பதிலளிக்கின்றேன்.” – என்று உறுதியளித்தார்.