திருமணத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தவர்கள் கார் பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்த விபத்தில் 5 பேர் பலி, 6 பேர் காயம்

ஹர்தோய்: உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் திருமணத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தவர்கள் கார் பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்த விபத்தில் ஒரு குழந்தை உள்பட ஐந்து பேர் பலியாகினர். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டம், பாட்டியானிம் கிராமத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பாலி கிராமத்தினர் பங்கேற்றுவிட்டு எர்டிகா காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, மஜ்ஜிலா காவல் நிலையம் அருகே வந்துகொண்டிருந்தபோது கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், காரில் இருந்த ஒரு குழந்தை உள்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர், ஆறு பேர் படுகாயமடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான ஐந்து பேரின் உடல்களையும் மீட்டு உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதேபோன்று, வெள்ளிக்கிழமை ஜான்பூர் மாவட்டம் லகோவா கிராமத்தில் ஒரு தனியார் பயணிகள் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் நான்கு பேர் பலியாகினர், 15 பேர் படுகாயமடைந்தனர். இதில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.