செம்மணி மனிதப் புதைகுழி குறித்து உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்! – நீதி அமைச்சர் தெரிவிப்பு.

“யாழ்ப்பாணம், செம்மணியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மனிதப் புதைகுழி அகழ்வு குறித்து அரசு விசேட கரிசனை கொண்டுள்ளது. இந்த மனிதப் புதைகுழி தொடர்பில் உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்.”

இவ்வாறு நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 19 எலும்புக்கூடுகள் முழுமையாக மீட்கப்பட்டுள்ள நிலையில் குறித்த விடயம் சம்பந்தமாக அரச தரப்பின் நிலைப்பாடு குறித்து வினவியபோதே நீதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“செம்மணிப் பகுதியில் முன்னெடுக்கப்படும் அகழ்வாராய்ச்சியின் போது கண்டறியப்படும் அனைத்து மனித எச்சங்களும் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படும். அதன்பின்னர் பகுப்பாய்வு அறிக்கைகளின் பிரகாரமே அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கூற முடியும்.

நீதிமன்றத்தின் அனுமதியில் குறித்த பகுதியில் தொடர்ச்சியாக அகழ்வு நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அது குறித்து வழக்குகளும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. ஆகவே, நீதிமன்றம்தான் இறுதியான முடிவை எடுக்கும்.

எவ்வாறாயினும் உண்மைகள் கண்டறியப்படுவதற்காகத் தொடர்ச்சியான அகழ்வுப் பணிகளுக்காக நிதி வழங்கல் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப உதவிகளையும் அரச தரப்பில் வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதோடு விசேட கரிசனைகளையும் கொண்டிருக்கின்றோம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.