இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் முதல் 15 நாள்களுக்கான அறிக்கையை 15ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குக! – பேராசிரியர் ராஜ் சோமதேவாவுக்கு யாழ். நீதிவான் ஆனந்தராஜா உத்தரவு.

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் முதல் 15 நாள்களுக்கான செயற்பாட்டு அறிக்கையை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பேராசிரியர் ராஜ் சோமதேவாவுக்கு நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜாவால் நெரூர் கட்டளை ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான அகழ்வுப் பணிகள் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண்காணிப்பில் துறைசார் நிபுணரும் பேராசிரியருமான ராஐ் சோமதேவாவின் தலைமையில் இடம்பெற்றிருந்தன. சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினரும் அகழ்வுப் பணிகளின்போது முன்னிலையாகியிருந்தனர்.

செம்மணி மனிதப் புதைகுழியின் முதலாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஜூன் மாதம் 7ஆம் திகதியுடன் நிறைவுக்கு வந்திருத்தன. இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஜூன் மாதம் 26ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தன. இந்த அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக நேற்றுடன் இடைநிறுத்தப்பட்டன. எதிர்வரும் 21ஆம் திகதி மீள அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகவுள்ளன.

இந்நிலையில் இரண்டாம் கட்ட அகழ்வுப்பணிகளின் முதல் 15 நாட்களுக்கான செயற்பாட்டு அறிக்கையை இந்த மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவுக்கு யாழ். நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவால் கட்டளை ஒன்று நேற்று வழங்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.