தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்யுங்கள் – அரசை வலியுறுத்தி நல்லூரில் கவனவீர்ப்பு.
நீண்ட காலமாகச் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி குரல் அற்றவர்களின் குரல் அமைப்பால் முன்னெடுக்கப்படும் “விடுதலை” எனும் தொனிப்பொருளிலான கவனவீர்ப்புப் போராட்டம் இன்று வியாழக்கிழமை யாழ். நல்லூர் கிட்டு பூங்காவில் முன்னெடுக்கப்பட்டது.
இதில் சிறை வாழ்க்கை கண்காட்சி, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நாட்டப்படவுள்ள விடுதலை விருட்சத்துக்கான விடுதலை நீர் சேகரிப்பும் இடம்பெற்றது.
இதில் தமிழ் அரசியல் கைதியாக 15 ஆண்டுகள் சிறையில் இருந்த அரசியல் கைதி விவேகாநந்தனூர் சதீஸ் எழுதிய “துருவேறும் கைவிலங்கு” நூல் அறிமுகமும் இடம்பெற்றது.
நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்குச் சிறைச்சாலையில் வழங்கப்படும் உணவும் தயாரித்து வழங்கப்பட்டது.
இன்று ஆரம்பமான இந்தக் கவனவீர்ப்புப் போராட்டம் நாளையும் தொடரவுள்ளது.
























