வத்தளையில் குடும்பஸ்தர் படுகொலை: சந்தேகநபர் ஒருவர் வாள்களுடன் கைது!

வத்தளையில் மாடி வீடொன்றில் குடும்பஸ்தர் ஒருவரைக் கூரிய ஆயுதங்களால் தாக்கிக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் பேலியகொடை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வத்தளை, அவரகொட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வத்தளை – ஹேகித்த பிரதேசத்துக்குக் கடந்த ஜூலை மாதம் 19 ஆம் திகதி ஓட்டோவில் சென்ற கும்பல் ஒன்று மாடி வீடொன்றில் இருந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையைக் கூரிய ஆயுதங்களால் தாக்கிக் கொலை செய்தது.

வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர் ஒருவர் வத்தளை, அவரகொட்டுவ பிரதேசத்தில் வைத்து நேற்று திங்கட்கிழமை மாலை கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து 4 வாள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

இதனையடுத்துக் கைது செய்யப்பட்ட இளைஞர் மேலதிக விசாரணைகளுக்காகப் பேலியகொடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பேலியகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.