ஓட்டோ சாரதி வெட்டிக்கொலை: 32 வயதுடைய இளைஞர் கைது!
கழுத்து வெட்டப்பட்டு ஓட்டோ சாரதி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெமட்டகொடை, கெட்டபுல பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கொழும்பு, தெமட்டகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மாராம வீதி பிரதேசத்தில் கடந்த ஜூலை மாதம் 24 ஆம் திகதி இரவு கழுத்து வெட்டப்பட்டு ஓட்டோ சாரதி ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
கொழும்பு, மாதம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதுடைய நபரே கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பில் தெமட்டகொடை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தெமட்டகொடை, கெட்டபுல பிரதேசத்தில் வைத்து நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தெமட்டகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
