வடக்கு, கிழக்கில் ஹர்த்தால்: இ.தொ.காவினர் முழு ஆதரவு – ஜீவன் தொண்டமான் எம்.பி. அறிக்கையூடாக அறிவிப்பு.
வடக்கு, கிழக்கில் எதிர்வரும் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் முழு ஆதரவு தெரிவித்துள்ளார்.
“முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் – முத்துஐயன்கட்டுப் பகுதியில் இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தார் எனக் கூறப்படும் இளைஞரின் மரணத்துக்கு நீதி கோரி நடைபெறவுள்ள ஹர்த்தாலுக்கு இலங்கையராகவும், மலையகத் தமிழராகவும், எனது முழுமையான ஆதரவைத் தெரிவிக்கின்றேன்.” – என்று அறிக்கையொன்றின் ஊடாக ஜீவன் தொண்டமான் எம்.பி. அறிவித்துள்ளார்.
“நீதிக்காகவும், இராணுவத்தின் அநீதியான நடவடிக்கைகளுக்கு எதிராகவும் நடைபெறவுள்ள இந்தக் ஹர்த்தாலுக்கு எனது உறுதியான ஆதரவை வெளிப்படுத்துகின்றேன்.
யுத்தம் நிறைவடைந்து 16 ஆண்டுகள் கடந்த பின்பும், இவ்வாறான மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் நிகழ்வது மிகவும் வருத்தமளிக்கின்றது. இப்படியான சம்பவங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.” – என்றும் ஜீவன் தொண்டமான் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.
