கிளிநொச்சி நகர அபிவிருத்தி நடைமுறைகள் தொடர்பில் வர்த்தக சங்கம் – கரைச்சி பிரதேச சபை இடையே இணக்கம்.

கிளிநொச்சி நகரின் மையப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அனுமதியற்ற வர்த்தக நிலையங்கள் மற்றும் சட்டவிரோதக் கட்டுமானங்களை அகற்றுவது தொடர்பில் கிளிநொச்சி நகர வர்த்தகர்களுக்கும் கரைச்சி பிரதேச சபையினருக்கும் இடையே ஏற்பட்ட முரண்நிலைகளுக்கு இரு தரப்பு கலந்துரையாடலில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

சபைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்திய விதத்தில் வர்த்தகர்களிடையே ஏற்பட்ட அதிருப்தி, அதனால் நிலவிய குழப்ப நிலை என்பவற்றுக்குத் தீர்வு காணும் நோக்கில், நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரனின் தலைமையில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர், செயலாளர் மற்றும் உறுப்பினர்களின் பிரசன்னத்துடன் கிளிநொச்சி நகர வர்த்தகர் சங்கத்தினருடனான கலந்துரையாடல் பிரதேச சபையின் மாநாட்டு மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

இதன்போது, சபையின் சட்ட வரம்புகளுக்கு உட்பட்ட தீர்மானங்களை உடனடியாக நடைமுறைப்படுத்துவதால் வர்த்தகர்கள் எதிர்கொள்ளக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையில், எதிர்வரும் ஜனவரி மாதம் 31ஆம் திகதி வரை வர்த்தகர்களுக்குக் கால அவகாசம் வழங்குமாறு வர்த்தக சங்கத்தினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் குறித்த விடயத்தில் இரு தரப்பினரிடையேயும் இணக்கம் எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.