வடக்கில் மூலைமுடுக்கெல்லாம் இராணுவம்; ஹர்த்தால் மூலம் எதிர்ப்பைக் காட்டுவோம்! – வவுனியா மாநகர மேயர் அறைகூவல்.

“வடக்கில் எங்கு பார்த்தாலும் இராணுவ முகாமை அவதானிக்கும் நிலையில் தெற்கின் நிலைமை வேறு விதமாக உள்ளது. எனவே, அதிகப்படியான இராணுவப் பிரசன்னத்தைக் குறைக்குமாறு வலியுறுத்தி எதிர்வரும் திங்கட்கிழமை வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தால் போராட்டத்துக்கு நாம் முழுமையான ஆதரவை வழங்குகின்றோம். இதற்கு அனைவரும் ஆதரவு – ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.”

இவ்வாறு வவுனியா மாநகர சபையின் மேயர் சு.காண்டீபன் தெரிவித்தார்.

இது தொடர்பாக இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர்,

“எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள ஹர்த்தால் போராட்டத்துக்கு நாம் முழுமையான ஆதரவை வழங்குகின்றோம். நாட்டில் உள்ள ஏனைய ஏழு மாகாணங்களை விட வடக்கு, கிழக்கில் இராணுவப் பிரசன்னம் அதிகமாக இருக்கின்றது.

எனவே, வடக்கு, கிழக்கில் உள்ள இராணுவத்தைக் குறைத்து அனைத்து மாகாணங்களுக்கும் சமமான அளவில் பங்கிடப்பட வேண்டும். எமது மக்களின் காணிகளை இராணுவம் விடுவிக்க வேண்டும்.

தற்போதுகூட வவுனியா விமானப் படை முகாமுக்காக சகாயமாதாபுரத்துக்குப் பின்புறமுள்ள 8 ஏக்கர் காணி சுவீகரிக்கப்படவுள்ளது. ஆனால், அந்தக் கிராமத்தில் விளையாட்டு மைதானம் ஒன்றுகூட இல்லை.

இறம்பைக்குளம் கிராமத்தில் பொதுத்தேவைக்கான காணி இல்லை. அந்தப் பகுதியில் உள்ள மயானத்துக்கான நிலம் போதுமானதாக இல்லை.

எனவே, இப்படியான ஒரு நிலை இருக்கும் போது இந்தக் காணி சுவீகரிப்பை எப்படி அனுமதிக்க முடியும். எமது பகுதிகளில் கிராமங்களுக்கு ஓர் இராணுவ முகாம் ஒன்று கட்டாயம் இருக்கும் நிலை உள்ளது. ஆனால், தெற்கில் அவ்வாறு இல்லை. எனவே, இவ்வாறான நிலைமை மாற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி நாம் இந்தத் ஹர்த்தாலுக்கு முழுமையான ஆதரவை வழங்குகின்றோம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.