ஐ.தே.கவுடன் இணைந்து செயற்பட ஐக்கிய மக்கள் சக்திக்கு அனுமதி! – ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தகவல்.
தமது கட்சி தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு கட்சியின் முகாமைத்துவக்குழு மற்றும் செயற்குழு என்பன அனுமதி வழங்கியுள்ளன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
“வரலாற்று முக்கியத்துவமிக்க இந்த முடிவை கட்சியின் மத்திய குழு இம்முறையே முதன்முறையாக எடுத்துள்ளது. அதற்கமைய இரு தரப்புகளுக்கு சிறப்பான பயணத்தை மேற்கொள்ள முடியும்.
எம்மிடையே பிளவுகள் இல்லை.
அதனால்தான் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அநீதி இழைக்கப்பட்டபோது அதற்கு எதிராக ஒன்றாக எழுந்து நின்றோம். ரணில் விக்கிரமசிங்க என்பவர் எமது சிரேஷ்ட தலைவர். தலைமைத்துவம் தொடர்பில் இங்கு பிரச்சினை இல்லை. இந்தப் பிரச்சினை சுமுகமாகத் தீர்க்கப்படும். இரு கட்சிகளின் தலைவர்கள் மற்றும் கட்சிகளின் ஆதரவாளர்கள் இதற்கு ஆதரவளிப்பார்கள்.” – என்றார்.
