ரூ. 4 லட்சம் காப்பீட்டுப் பணத்துக்காக அண்ணனைக் கொன்ற தங்கை மற்றும் மைத்துனர்!

விபத்துக் காப்பீடு தொகை ரூ. 4 லட்சத்தை அபகரிக்க மனைவியின் சகோதரனைக் கொலை செய்த மைத்துனரை, காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு மணிகண்டனின் தாய் விபத்தில் இறந்து போனார். விபத்துக் காப்பீடு செய்து இருந்ததால் காப்பீடு தொகை ரூ. 12 லட்சம் வந்திருக்கிறது.

இதில் மணிகண்டன் மற்றும் அவருடைய சகோதரிகள் இரண்டு பேர் என மூன்று பேருக்கும் தலா ரூபாய் 4 லட்சம் பிரித்துக் கொண்டனர். மணிகண்டன் அவருக்கு வந்த பணத்தை, தங்கை அஞ்சுவின் கணக்கிற்கு அனுப்பி, அந்தப் பணத்தை பின்னர் வாங்கிக் கொள்வதாகவும் தெரிவித்து உள்ளார்.

இதனால் தங்கை அஞ்சுக்கு மொத்தம் ரூ. 8 லட்சம் வந்தது. அஞ்சுக்கு வந்த ரூ. 4 லட்சத்தை எடுத்துக் கொண்டதுடன், அண்ணனின் ரூ. 4 லட்சத்தையும் எடுத்து கணவருடன் சேர்ந்து ஆடம்பரமாக செலவு செய்து உள்ளார். இந்தப் பணத்தை கேட்டால் மணிகண்டனை தீர்த்து கட்டவும் திட்டம் தீட்டினர்.

சம்பவத்தன்று கணவன் – மனைவி சண்டை போடுவது போல் நடித்து உள்ளனர். மனைவி அஞ்சுவை, வீட்டு அறையில் வைத்து கணவர் அஜித் குமார் பூட்டி உள்ளார். இதனை அறிந்த மணிகண்டன் தனது தங்கையைப் பூட்டி வைத்தது ஏன் ? என்று மைத்துனரிடம் கேட்டுள்ளார்.

முன்னதாகவே திட்டமிட்டபடி அஜித்குமார், மணிகண்டனின் இடுப்பு, முதுகு, தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். படுகாயம் அடைந்த மணிகண்டன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மணிகண்டன் பலியானார்.

மணிகண்டன் படுகாயம் அடைந்த நிலையில், தங்கை அஞ்சு, அவரது கணவர் மாட்டிக் கொள்வாரோ ? என்று கருதி காவல் துறையில் புகார் செய்யவில்லை, இது பற்றி விவரம் தெரிந்ததும் மணிகண்டனின் மற்றொரு சகோதரி தீபா மதுக்கரை காவல் துறையில் புகார் செய்தார்.

ஏற்கனவே மைத்துனர் அஜித்குமார் தலைமறைவாக இருந்த நிலையில், மணிகண்டன் இறந்தத் தகவலை தொடர்ந்து தங்கை அஞ்சும் தலைமறைவானார்.

இந்த நிலையில் மதுக்கரை போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து இரண்டு பேரையும் தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.