இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட செவ்வந்தி குழு – மேலதிக விசாரணைக்காகச் சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு.
பிரபல பாதாள உலகத் தலைவர் ‘கணேமுல்ல சஞ்சீவ’ கொலை தொடர்பில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி மற்றும் அவரது குழுவினர் நேற்று மாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.
அவர்கள் மேலதிக விசாரணைகளுக்காகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் வைத்து சுட்டுக் படுகொலை செய்யப்பட்ட ‘கணேமுல்ல சஞ்சீவ’ கொலையின் பிரதான சூத்திரதாரி எனக் கருதப்படும் இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டார்.

அவருடன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களான ஜே.கே. பாய், தக்ஷி மற்றும் சுரேஷ் உள்ளிட்ட மேலும் நால்வர் கைது செய்யப்பட்டனர்.
இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட ஐந்து பேரையும் நாட்டுக்கு அழைத்து வருவதற்காகப் பொலிஸ் விசேட அதிரடிப் படையின் இரு அதிகாரிகள் நேற்றுக் காலை நேபாளம் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
