அநுர அரசின் பட்ஜட்டில் 1,757 பில்லியன் ரூபா நிதிப் பற்றாக்குறை!
தேசிய மக்கள் சக்தி அரசின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் ஆயிரத்து 757 பில்லியன் ரூபா நிதிப் பற்றாக்குறையுடனேயே முன்வைக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசின் 2026ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நேற்றுமுன்தினம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. இதன்படி, வரி, மானியங்கள் உள்ளடங்களாக மொத்த வருமானமாக 5 ஆயிரத்து 300 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது. மீண்டெழும் செலவீனம், வட்டி உட்பட மொத்த செலவீனமாக 7 ஆயிரத்து 57 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய ஆயிரத்து 757 பில்லியன் ரூபா பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்த நிதிப் பற்றாக்குறை மொத்த தேசிய உற்பத்தியில் 5.1 சதவீதமாக இருக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அடுத்த வருடம் 4 – 5 சதவீத பொருளாதார வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
அரச வருமானம் மொத்தத் தேசிய உற்பத்தியில் 15.3 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
2028ஆம் ஆண்டில் வெளிநாட்டுக் கடனைப் பெறுவதற்குரிய இயலுமையை இலங்கை பெறும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. உற்பத்தி பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்குரிய திட்டங்களும் உள்ளன. நிதி அமைச்சுக்கே கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த படியாக பாதுகாப்பு அமைச்சுக்கும், சுகாதார அமைச்சுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பட்ஜட் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நீண்டநேரம் உரையாற்றி இருந்தாலும், புதிய அரசமைப்பு மற்றும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம் தொடர்பில் எதுவும் குறிப்பிடவில்லை என்று எதிரணி சுட்டிக்காட்டியுள்ளது.
