4 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை – மேற்கு வங்கத்தில் கொடூரம்!

மேற்கு வங்கத்தில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

மேற்கு வங்கத்தின் தாராகேஷ்வரர் ரயில் நிலையத்தின் அருகே, சனிக்கிழமை அதிகாலையில் சாலையோரத்தில் பாட்டியுடன் உறங்கிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியை மர்ம நபர் ஒருவர் கடத்திச் சென்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அருகில் உறங்கிக் கொண்டிருந்த சிறுமியைக் காணவில்லை என்று உடனிருந்தோர் தேடிய நிலையில், அருகேயிருந்த ஒரு வாய்க்காலில் இருந்து அழுகுரல் கேட்டு, சிறுமியை ஆடைகளின்றி நிர்வாண நிலையில் ரத்தக் காயங்களுடன் மீட்டனர்.

இதனையடுத்து, மருத்துவமனையில் சிறுமியை அனுமதித்த நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரிய வந்தது. சிறுமியின் கன்னத்தில் கடித்த காயங்களுடன், ரத்தப் போக்கும் தொடர்ந்த நிலையில், மருத்துவமனையில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, பாலியல் வன்கொடுமைக்கு 4 வயது சிறுமி ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் போக்ஸோ வழக்கு பதியப்பட்டு, குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.