வடமராட்சியில் பிரான்ஸ் இளைஞர் படுகொலை: அம்பாறையில் இருவர் ஹெரோயினுடன் கைது!

பிரான்ஸ் நாட்டில் இருந்து நாடு திரும்பி யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டில் அம்பாறை, அக்கரைப்பற்றுப் பிரதேசத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமராட்சி, கரவெட்டி, கரணவாய் பகுதியைச் சேர்ந்த இராஜகுலேந்திரன் பிரிந்தன் (வயது 29) என்ற இளைஞர் கடந்த செவ்வாய்க்கிழமை படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், சந்தேகநபர்களை அம்பாறையில் வைத்து ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட நவீன ரக மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களும் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல ஆயத்தங்கள் செய்துள்ளனர் என்று பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இருவரையும் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், விசாரணைகளின் பின்னர் அவர்களைப் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.