அச்சுறுத்தி எம்மை அடக்கவே முடியாது! – இப்படி மொட்டுக் கட்சி வீராவேசம்.
அச்சுறுத்தல்கள் மூலம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அரசியல் பயணத்தைத் தடுக்க முடியாது என்று அக்கட்சியின் உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான இந்திக்க அனுருத்த தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளைத் தேசிய மக்கள் சக்தி அரசு நிறைவேற்றவில்லை என்பதாலேயே எமக்கு வீதிக்கு இறங்கி அதனை நினைவுபடுத்த வேண்டி ஏற்பட்டது. அந்தவகையில் எமது நுகேகொடைக் கூட்டம் வெற்றியளித்தது.
மக்களுக்காக எமது அரசியல் நடவடிக்கை தொடரும். அச்சுறுத்தல் மூலம் எவரும் எமது பயணத்தைத் தடுக்க முடியாது.
மக்களின் குறை கேட்கும் தலைவராக நாமல் ராஜபக்ஷவே தற்போது விளங்குகின்றார்.
நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அரசிடம் மீண்டும் வலியுறுத்துகின்றோம்.” – என்றார்.
