40 பேரைப் பலியெடுத்த மோசமான காலநிலை! – இருபதுக்கும் மேற்பட்டோர் மாயம்; பதுளை மாவட்டத்தில் பெரும் பாதிப்பு.
இலங்கை முழுவதும் நிலவும் மோசமான காலநிலை காரணமாக 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதுடன் 20 இற்கும் மேற்பட்டோர் காணாமல்போயுள்ளனர்.
நாடு முழுவதும் பெய்யும் கனமழை, வெள்ளம், பலத்த காற்று மற்றும் மண்சரிவுகளால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பதுளை மாவட்டமே பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. இந்த மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் பெய்த அடைமழை மற்றும் மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்களால் 21 பேர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் காணாமல்போயுள்ளனர்.
அத்துடன் இந்த மாவட்டத்தில் 886 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 89 பேர் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கடந்த 24 மணிநேரத்தில் கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற மண்சரிவில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 4 பேர் மாயமாகியுள்ளனர்.
இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் காணாமல்போயுள்ளனர்.
இதேவேளை, பாதகமான காலநிலை காரணமாக ஏற்படும் எந்தவொரு அவசரகால சூழ்நிலைகளையும் 117 என்ற அவசர தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு பேரிடர் மேலாண்மை மையம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.



