அரசுக்கு ஆலோசனை வழங்க ரணில் தயாராம் – ஐ.தே.க. செயலர் தலதா அறிவிப்பு.
இலங்கையில் அனர்த்த முகாமைத்துவம் மற்றும் இடர் காலங்களில் அரசுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தயாராக இருக்கின்றார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
“முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மிகுந்த அனுபவமும், அறிவும் கொண்டவர். நாட்டைப் பாதிக்கும் அனர்த்தங்களைக் கையாள்வதில் அவர் தனது ஆலோசனைகளை வழங்க முன்வந்துள்ளார்.
ஆலோசனைகளை வழங்கத் தயாராக இருந்தாலும், அவரோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியின் ஏனைய உறுப்பினர்களோ தற்போதைய அரசில் எந்தவிதமான பதவிகளையும் பெற்றுக்கொள்ளும் எண்ணத்தில் இல்லை.
எங்களின் தலைவரிடம் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களைக் கொண்டு, அனர்த்த முகாமைத்துவப் பணிகளில் அரசுக்கு உதவ ஐக்கிய தேசியக் கட்சியினராகிய நாங்களும் தயாராக இருக்கின்றோம்.” – என்றார்.
