முஜிபுர் ரஹ்மான் எம்.பிக்கு மிரட்டலா? வீட்டுக்கு வரும் இனந்தெரியாத நபர்கள் – பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பொலிஸ்மா அதிபரிடம் அவர் கோரிக்கை.
ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தனது பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த மாதம் மற்றும் கடந்த வாரம் பொலிஸார் எனக் கூறிக்கொண்டு அடையாளம் தெரியாத நபர்கள் தனது வீட்டுக்கும் உறவினர்களின் வீடுகளுக்கும் சென்றனர் என்றும், இதுகுறித்து விசாரணை நடத்துமாறு பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு அளித்துள்ளேன் என்றும் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. கூறியுள்ளார்.
அரசின் குறைபாடுகளைக் கடுமையாக விமர்சிப்பதால் தமது பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது என்று முஜிபுர் ரஹ்மான் எம்.பி. குற்றம் சுமத்தியுள்ளதுடன், இதுபோன்ற சூழலில், அரசுடன் தொடர்புடைய பெலவத்தை மக்கள் குழு ஒன்று தனது வீட்டுக்குத் தெரியாத நபர்களை அனுப்பித் தன்னை மிரட்ட முயற்சிக்கின்றது எனச் சந்தேகம் இருக்கின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“எனது வீடு மற்றும் உறவினர்களின் வீடுகளுக்குச் சென்ற அதிகாரிகள் யார் என்பது மூத்த பொலிஸ் அதிகாரிகளுக்குத் தெரியாது.
கடந்த மாதத்தின் முதல் வாரத்தில் நுகேகொடையின் மிரிஹான பிரிவைச் சேர்ந்ததாகக் கூறிக்கொள்ளும் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் எனது வீட்டுக்குச் சென்றிருந்தனர். அப்போது நாடாளுமன்றத்தில் பட்ஜட் விவாதத்தில் நான் பங்கேற்றிருந்தேன்.” – என்றும் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. மேலும் கூறியுள்ளார்.
