சிரேஷ்ட ஊடகவியலாளர் அஸ்வர் காலமானார்!

சிரேஷ்ட ஊடகவியலாளரும் இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஓய்வுபெற்ற அதிகாரியும் மாளிகைக்காடு அந்நூர் ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் முன்னாள் செயலாளருமான ஏ.அஸ்வர் தனது 61 ஆவது வயதில காலமானார்.

இவரது ஜனாஸா இன்று சனிக்கிழமை மாளிகைக்காடு அந்நூர் ஜும்ஆப் பள்ளி மையவாடியில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மாளிகா அஸ்வர் என அறியப்பட்டிருந்த இவர் வீரகேசரி மற்றும் தினகரன் உள்ளிட்ட தேசிய பத்திரிகைகளினதும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினதும் பிராந்திய செய்தியாளராக நீண்ட காலம் பணியாற்றியதுடன் மெட்ரோ மிரர் செய்தி இணையத் தளத்தின் ஸ்தாபக ஆசிரியர் பீட ஆலோசகராகவும் இருந்து ஊடகப் பணியாற்றியுள்ளார்.

இலக்கியத்துறையிலும் கூடிய ஈடுபாடு காட்டி வந்த இவர் மாளிகா எனும் இலக்கிய சஞ்சிகையின் ஸ்தாபக ஆசிரியராக இருந்து அதனை நீண்ட காலம் வெளியிட்டு வந்ததுடன் பிராந்திய மற்றும் தேசிய ரீதியில் வெளியான பிரபல சஞ்சிகைகளிலும் முற்போக்கு சிந்தனையுடன் நிறைய கவிதைகள், சிறுகதைகளை எழுதி வந்துள்ளார். இவர் தனது பேனா முனையூடாக சமூகம், பிராத்தியம் சார்ந்த பிரச்சினைகளை வெளிக்கொணர்வதில் அதீத கரிசனை காட்டியவர்.

மாளிகைக்காடு அந்நூர் மஸ்ஜிதை ஜும்ஆப் பள்ளிவாசலாக ஸ்தாபிக்கும் செயற்பாட்டில் முன்னிலை வகித்திருந்த இவர் சமூக சேவைகளிலும் கூடிய ஈடுபாடு காட்டி வந்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.