ரணிலுடன் இணைய தயாரில்லை சஜித்! – இப்படிக் கூறுகின்றார் முன்னாள் அமைச்சர் அஜித் மானப்பெரும.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பயணிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ விரும்பமாட்டார் என்று முன்னாள் அமைச்சர் அஜித் மானப்பெரும தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஓரணியில் இணைந்து பயணிப்பதற்கு அண்மைக்காலமாக நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. சஜித் தலைவர், ரணில் தலைமை ஆலோசகர் என்ற அடிப்படையில் இந்த இணைவு சாத்தியப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறான நிலையிலேயே, இந்த இணைப்புக்குச் சாத்தியம் இல்லை என்று முன்னாள் அமைச்சர் அஜித் மானப்பெரும தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“ஒன்றிணைந்து செயற்படும் திட்டங்களில் சஜித்துக்கு உடன்பாடு இல்லை. அவரிடம் அத்தகைய தலைமைத்துவம் இல்லை. சஜித் எப்போதும் தனித்துச் செயற்படுவதையே விரும்புபவர்.” – என்றார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் கீழேயே அஜித் மானப்பெரும வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். எனினும், கடைசி நேரத்தில் தேர்தலில் இருந்து விலகி, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
